லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் பெயர், பட்டோடி கோப்பையில் இருந்து ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை என மாற்றப்படலாம் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. இந்தத் தொடர் பல ஆண்டுகளாக பட்டோடி கோப்பை என்று அழைக்கப்பட்டு வருகிறது. ஆனால், இப்போது அதை மாற்றுவதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முயற்சி செய்து வருகிறது. இதற்கான பெயர் அறிவிப்பு இதுவரை நடக்கவில்லை என்றாலும், இன்னும் சில நாட்களில் ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை என்ற பெயர் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

இது குறித்துப் பேசிய கபில் தேவ், "இது மிகவும் விசித்திரமாக இருக்கிறது. இப்படி எல்லாம் கூட நடக்குமா? ஆனால் இது சரிதான். கிரிக்கெட்டில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். அந்த நாளின் முடிவில் இதில் எந்த வித்தியாசமும் இருக்கப் போவதில்லை. கிரிக்கெட் என்பது கிரிக்கெட்டாகவே இருக்கும். ஆடுகளத்தில் கிரிக்கெட் மாற்றம் அடையாமல் அதே போலத்தான் இருக்கும்" எனத் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பட்டோடி கோப்பை என்ற பெயரை மாற்றுவதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தற்போது ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை எனப் பெயர் மாற்றப்பட உள்ள நிலையில், சச்சின் டெண்டுல்கர் இதற்கு ஆட்சேபனை தெரிவித்து, தனது பெயரை வைக்க வேண்டாம் எனக் கோரிக்கை வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, இந்த பெயர் மாற்றப்படுமா அல்லது அந்த முடிவை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கைவிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டி ஜூன் 20 வெள்ளிக்கிழமை அன்று துவங்க உள்ளது. அப்போது இந்த பெயர் மாற்றம் குறித்த அறிவிப்பும் சேர்ந்து வெளியாக வாய்ப்பு உள்ளது. எனினும், சச்சின் வேண்டுகோள், பிசிசிஐ தலையீடு ஆகியவற்றால் பெயர் மாற்றம் கைவிடப்படலாம் எனவும் ஒரு கருத்து உள்ளது. ஆனால், பிசிசிஐ அதற்கான நடவடிக்கையை எடுக்குமா? என்பதே இப்போதைய கேள்வி.