மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் முக்கிய வீரராக மாறி இருக்கும் கே எல் ராகுல், தன்னை இந்திய தேர்வுக் குழு நம்பாதது குறித்தும், ஒவ்வொரு முறையும் தனது முந்தைய ஆட்டங்களை அவர்கள் மறந்துவிடுவதாகவும் மனக்குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும், பொதுமக்களை நம்ப வைப்பதை விட, தேர்வு குறித்த முடிவுகளை எடுப்பவர்களை நம்ப வைப்பதுதான் சவாலான விஷயமாக இருக்கிறது என வெளிப்படையாக தேர்வுக் குழுவை விமர்சித்து இருக்கிறார்.
இந்திய அணி அடுத்து இங்கிலாந்துக்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க வேண்டிய சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அந்தத் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. சுப்மன் கில் கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். அவரது தலைமையில் கே எல் ராகுல், ரவீந்திர ஜடேஜா, பும்ரா உள்ளிட்ட மூத்த வீரர்கள் விளையாட உள்ளனர்.

இந்த நிலையில், கே எல் ராகுல் அணி நிர்வாகத்தின் வேண்டுகோளின்படி எந்த இடத்திலும் பேட்டிங் செய்து வருகிறார். ஒவ்வொரு இடத்திலும் பேட்டிங் செய்யும்போதும் தனது திறமையை நிரூபித்து இருக்கிறார். அப்படி இருந்தும், அடுத்த தொடருக்கு அவரை தேர்வு செய்வார்களா இல்லையா என்று நிச்சயமற்ற சூழ்நிலையே உள்ளது. இது குறித்து அவர் இங்கிலாந்தில் உள்ள ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இது பற்றி அவர் பேசியதாவது: "நான் ஒரு நாள் தொடரில் ஒவ்வொரு முறை சிறப்பாக விளையாடிவிட்டு ஓய்வு எடுக்கும் போதும், அடுத்த நான்கு அல்லது ஐந்து மாதத்திற்குப் பிறகு மீண்டும் அணிக்கு திரும்பும் போது கேள்விகளை எதிர்கொள்கிறேன். நான் பிளேயிங் லெவனில் இடம் பெறுவேனா, இந்த அணிக்குள் எப்படி பொருந்துவேன் என்று கேள்வி கேட்கிறார்கள். அப்படி நடக்கும் போது, இன்னும் நான் என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தோன்றும்.
என்னை எந்த இடத்தில் விளையாட சொன்னாலும் நான் அந்த இடத்தில் சிறப்பாக விளையாடுகிறேன். என்னுடைய நம்பிக்கையுடன் அந்த இடத்தில் என்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறேன். ஒவ்வொரு முறையும் என்னை நிரூபிப்பது பற்றி எனக்கு கவலை இல்லை. அதுதான் இந்த விளையாட்டு. ஒவ்வொரு தொடரிலும் நாம் நன்றாக விளையாட வேண்டும். உலகம் முழுவதும் இருக்கும் சர்வதேச கிரிக்கெட் வீரர்களுக்கு இது பொருந்தும். ஆனால் இது கடினமான விஷயம் அல்ல.
முடிவு எடுக்கும் இடத்தில் இருப்பவர்கள் இதற்கு முந்தைய தொடரில் அந்த வீரர் எப்படி விளையாடினார் என்பதை மறந்து விடுகிறார்கள். அதுதான் எனக்கு மிகவும் சவாலாக உள்ளது. அடுத்த ஒரு நாள் தொடர் இன்னும் ஐந்து மாதங்கள் கழித்து வரும். ஏனெனில், இந்த இங்கிலாந்து டெஸ்ட் தொடர் மிகவும் நீண்டதாக இருக்கும். அப்போது நிச்சயம் 2027 உலகக்கோப்பை அல்லது அதற்கு அடுத்த கோப்பையில் விளையாடும் வீரர்களைத் தான் நாம் தேர்வு செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், இது எனக்கு சவாலாக இல்லை. இது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரும் எதிர்கொள்ளும் விஷயம்தான்" என்றார் கே எல் ராகுல்.