லண்டன்: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த ஆல்-ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவின் பேட்டிங்கை பாராட்டியுள்ள இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மொயீன் அலி, இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவரது பந்துவீச்சு திறனைக் கண்டு ஏமாற்றம் அடைந்ததாகவும் கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தற்போது 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்துக்கு சாதகமாக உள்ளது. லார்ட்ஸில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில், 193 ரன்கள் என்ற வெற்றி இலக்கைத் துரத்திய இந்திய அணி, 112 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இருப்பினும், ரவீந்திர ஜடேஜா கடைசி வரை போராடி 181 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் எடுத்தார். ஆனாலும், இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

மொயீன் அலி இந்த விமர்சனத்தை முன்வைக்க காரணம் உள்ளது. ரவீந்திர ஜடேஜா இந்தத் தொடரில் இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகத் திகழ்கிறார். லார்ட்ஸ் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 72 ரன்கள் எடுத்த அவர், இங்கிலாந்தில் சவுரவ் கங்குலி மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோருக்குப் பிறகு தொடர்ச்சியாக நான்கு அரை சதங்கள் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையைப் பெற்றார்.
இருப்பினும், பந்துவீச்சில் அவர் சோபிக்கவில்லை. ஆறு இன்னிங்ஸ்களில் வெறும் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். அவரது பந்துவீச்சு சராசரி சுமார் 114 ஆக உள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், ஜடேஜாவும் மொயீன் அலியும் ஐபிஎல் தொடரில் 2021 முதல் 2024 வரை சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிக்காக ஒன்றாக விளையாடினர். இந்த நிலையில் தான் தனது சக சிஎஸ்கே வீரரான ரவீந்திர ஜடேஜா குறித்து மொயீன் அலி விமர்சனம் செய்துள்ளார்.
இந்தத் தொடரில் ரவீந்திர ஜடேஜாவின் செயல்பாடு குறித்து ஊடகங்களிடம் பேசிய மொயீன் அலி, ஜடேஜாவின் பந்துவீச்சு தன்னை ஈர்க்கவில்லை என்றும், அவருக்கு அதிக விக்கெட்டுகள் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். இதுபற்றி அவர் கூறியதாவது:
"ஜடேஜா என்ன செய்கிறார் என்பது அவருக்குத் தெரியும். இந்தத் தொடரில் அவர் பேட்டிங்கில் அற்புதமாகச் செயல்பட்டுள்ளார். ஆனால், பந்துவீச்சில், அவருக்கு விக்கெட்டுகள் கிடைக்கவில்லை. அவர் சிறப்பாக பந்து வீசினாலும், அது மிகச் சிறப்பாக இல்லை. இப்போது அவர் தனது பேட்டிங்கின் உச்சத்தில் இருக்கிறார். பந்துவீச்சில் விக்கெட்டுகள் வீழ்த்தாதது ஒரு குறையாகவே உள்ளது" என்றார்.
இந்திய அணியில் குல்தீப் யாதவ் விளையாடுவதை தான் பார்க்க விரும்புவதாக மொயீன் அலி கூறினார். ஆனால், அவரை அணியில் சேர்ப்பது கடினம் என்றும் கூறினார். "நான் குல்தீப்பை இந்திய அணியில் பார்க்க விரும்புகிறேன், ஆனால், யாருக்குப் பதிலாக என்பது எனக்கு தெரியவில்லை. வாஷிங்டன் சுந்தர் நன்றாகப் பந்து வீசியுள்ளார், ஜடேஜா பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டுள்ளார். எனவே குல்தீப் யாதவை அணிக்கு கொண்டு வருவது கடினம்" என்று மொயீன் அலி மேலும் கூறினார்.
இந்திய அணியில் பேட்டிங் வரிசைக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், குல்தீப் யாதவிற்கு முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.