பிர்மிங்காம்: இந்திய டெஸ்ட் அணியின் மூத்த வீரரான ரவீந்திர ஜடேஜாவின் இடத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சுழற் பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜாவின் செயல்பாடு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. குறிப்பாக, இங்கிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கின்போது ரவீந்திர ஜடேஜாவின் பந்துவீச்சு மிகவும் மோசமாக இருந்தது.
"இப்படி ஒரு அனுபவ வீரர் சொதப்புவார் என எதிர்பார்க்கவில்லை" என முன்னாள் வீரர்கள் பலரும் சுட்டிக்காட்டி உள்ளனர். இது அவருக்கு அதிக அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், ரவீந்திர ஜடேஜாவால் இங்கிலாந்து மண்ணில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாததால், அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெறுவதும் சந்தேகமாக மாறியுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. ஐந்தாவது நாள் அன்று அந்த அணியின் 10 விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டிய நிலையில் இந்திய அணி இருந்தது. பொதுவாக, எந்த ஒரு ஆடுகளமாக இருந்தாலும், டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் அன்று ஆங்காங்கே சிறிய அளவில் சேதமடைந்திருக்கும்.
சுழற்பந்துவீச்சாளர்கள் அந்த இடத்தில் பிட்ச் செய்து பந்துவீசினால், பந்து நன்றாகத் திரும்பும். ஆனால், ரவீந்திர ஜடேஜா ஐந்தாவது நாள் ஆட்டத்தின்போது, மோசமாக இருந்த பிட்ச்சின் பகுதியில் பந்தை வீசவில்லை. மாறாக, ஷார்ட் பிட்ச் அல்லது ஃபுல் லென்த் என்ற வகையில்தான் பந்தை வீசினார். அதனால்தான் அவரால் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
ரவீந்திர ஜடேஜா இரண்டாவது இன்னிங்ஸில் 24 ஓவர்கள் வீசி 104 ரன்கள் விட்டுக்கொடுத்தார். ஒரே ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தினார். அவரது எக்கானமி 4.30 என்பதாக இருந்தது. அதாவது, ஒரு ஓவருக்கு 4.3 ரன்களை விட்டுக்கொடுத்து ஏமாற்றம் அளித்திருந்தார்.
ரவீந்திர ஜடேஜாவின் பந்துகளில் இங்கிலாந்து வீரர்கள் எளிதாக ரிவர்ஸ் ஸ்வீப் செய்தனர். அதற்குக் காரணம், பந்து பெரிய அளவில் திரும்பவில்லை. பந்து திரும்புவதற்கு ஏற்ற வகையில் மோசமாக இருந்த பிட்ச்சின் பகுதியில் அவர் பந்தை வீசவில்லை.
இந்த நிலையில் தான், முழு நேர சுழற்பந்துவீச்சாளரான குல்தீப் யாதவை அணியில் சேர்க்க வேண்டும் என்ற வாதம் எழுந்துள்ளது. இதை மறுக்கவும் முடியாது. ஏனெனில், குல்தீப் யாதவ் இதற்கு முன் இது போன்ற சூழ்நிலைகளில் சிறப்பாக பந்துவீசியிருக்கிறார். ஆனால், அவருக்குப் போதிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. எனவே, தற்போது குல்தீப் யாதவுக்கு வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ரவீந்திர ஜடேஜா விளையாடுவாரா அல்லது குல்தீப் யாதவ் இடம் பெறுவாரா என்று பொறுத்திருந்து பார்க்கலாம். ரவீந்திர ஜடேஜாவுக்குச் சாதகமாக அவர் பேட்டிங் செய்வார் என்ற ஒரு விஷயம் உள்ளது. ஆனால், அவரால் விக்கெட் வீழ்த்த முடியவில்லை என்றால், அது நிச்சயம் அணியின் பலவீனமாகவே இருக்கும்.