லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணி இங்கிலாந்தில் தற்போது முகாமிட்டு பயிற்சி செய்து வருகிறது. நேற்று இந்திய வீரர்கள் வலைப் பயிற்சி செய்து வந்தனர். அப்போது ரிஷப் பண்ட் அடித்த ஒரு பிரம்மாண்ட சிக்ஸ் மைதானத்தின் மேற்கூரையை உடைத்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.
இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டிருக்கிறார். சுப்மன் கில் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். புதிய கேப்டனின் தலைமையில் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இதில் ரிஷப் பண்ட்டின் செயல்பாடு முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

அவர் சமீபத்தில் ஐபிஎல் தொடரில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருந்தார். அதற்கு முன் நியூசிலாந்து டெஸ்ட் தொடர் மற்றும் ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்களிலும் பெரிதாக ரன் குவிக்கவில்லை. எனவே, அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் ரன் குவிப்பாரா என்று கேள்வி உள்ளது.
இந்த நிலையில் தான் ரிஷப் பண்ட் பயிற்சியின் போது சிக்ஸ் அடித்து மேற்கூரையை உடைத்திருக்கிறார். இது இங்கிலாந்து அணிக்கு ஒரு எச்சரிக்கையாகவும் அமைந்து இருக்கிறது. மறுபுறம் இந்திய அணிக்கு நம்பிக்கை அளித்தாலும், போட்டியில் ரிஷப் பண்ட் என்ன செய்வார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ரிஷப் பண்ட் கடைசியாக இங்கிலாந்து மண்ணில் விளையாடிய டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்க்ஸில் 146 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 57 ரன்களும் எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இங்கிலாந்து மண்ணில் அவர் அதிகமாக ரன் குவித்திருக்கிறார் என்பது இந்திய அணிக்கு சாதகமான ஒன்றாக இருக்கிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோத உள்ள இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி ஜூன் 20 அன்று நடைபெற உள்ளது. முதல் போட்டி லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லே மைதானத்தில் நடைபெற உள்ளது.