லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான முக்கியமான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இந்திய அணியில் இடம்பிடித்திருந்த மூன்று முக்கிய வீரர்கள் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கப்படாமல் வெளியே அமரவைக்கப்பட்டது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் ஆகிய மூன்று வீரர்களும் இந்திய அணியுடன் தொடர் முழுவதும் பயணித்தும், ஒருமுறை கூட களமிறங்கிய 11 வீரர்கள் அடங்கிய அணியில் சேர்க்கப்படவில்லை. இது இந்திய அணி நிர்வாகத்தின் முடிவு எடுக்கும் திறன் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த டெஸ்ட் தொடரை 2-2 என சமன் செய்யும் முனைப்புடன் இந்திய அணி, ஓவல் மைதானத்தில் நடைபெறும் கடைசி டெஸ்டில் களமிறங்கியது. இந்த முக்கியமான போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் காயமடைந்த ரிஷப் பன்ட்டுக்குப் பதிலாக துருவ் ஜுரல், ஷர்துல் தாக்கூர்க்குப் பதிலாக மீண்டும் கருண் நாயர், அன்ஷுல் கம்போஜ்க்குப் பதிலாக ஆகாஷ் தீப் மற்றும் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டு பிரசித் கிருஷ்ணா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இப்படி அணியில் நான்கு அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்ட போதிலும், வாய்ப்புக்காகக் காத்திருந்த இந்த மூன்று வீரர்களுக்கும் மீண்டும் ஏமாற்றமே மிஞ்சியது.

இந்திய அணியில் இருக்கும் தனித்துவமான சைனாமேன் பந்துவீச்சாளரான குல்தீப் யாதவ், இந்தத் தொடரில் ஒரு போட்டியில் கூட சேர்க்கப்படாதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. டெஸ்ட் போட்டியின் கடைசி இரண்டு நாட்களில், ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக மாறும் போது, குல்தீப் போன்ற தரமான சுழற்பந்து வீச்சாளர் எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தும் ஒருவராக இருப்பார் என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி உட்பட பல கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
எனினும், இந்திய அணி நிர்வாகம் பேட்டிங் செய்யக்கூடிய சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரையே தொடர்ந்து நம்பியது. இதன் காரணமாக, குல்தீப்பின் வாய்ப்பு பறிபோனது. அவர் கடைசியாக அக்டோபர் 2024-ல் நியூசிலாந்துக்கு எதிராக தனது கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.
உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக் கோப்பையில் ரன்களைக் குவித்து வரும் அபிமன்யு ஈஸ்வரன், நீண்ட காலமாக இந்திய டெஸ்ட் அணியுடன் பயணித்து வருகிறார். ஆனால், அவருக்கு இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது வேதனையான விஷயம். இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக நடந்த இந்தியா 'ஏ' அணிக்கு இவர்தான் கேப்டனாக இருந்தார். ஆனால், அவருக்குக் கீழ் விளையாடிய வீரர்கள் கூட இந்திய அணிக்கு அறிமுகமாகிவிட்ட நிலையில், ஈஸ்வரனின் காத்திருப்பு தொடர்கிறது.
2022-ல் முதன்முதலாக இந்திய டெஸ்ட் அணிக்குத் தேர்வானதிலிருந்து, பல பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடி அறிமுகமாகியுள்ளனர், ஆனால், அபுமன்யு ஈஸ்வரனுக்கு மட்டும் டெஸ்ட் போட்டியில் ஆடும் வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன் அவர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரிலும் ஐந்து போட்டிகளிலும் வெளியே அமர வைக்கப்பட்டு இருந்தார். இப்போது இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் அதே பரிதாப நிலைக்கு ஆளாகி இருக்கிறார்.
இந்திய அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங், மான்செஸ்டரில் நடந்த நான்காவது டெஸ்டில் அறிமுகமாவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், போட்டிக்கு முன்னதாக ஏற்பட்ட காயம் காரணமாக அந்த வாய்ப்பை இழந்தார். ஐந்தாவது டெஸ்டுக்கு முன்னதாக கேப்டன் சுப்மன் கில், "அர்ஷ்தீப்பைத் தயாராக இருக்கச் சொன்னோம்" என்று கூறியதால், இந்த முறையாவது அவர் அறிமுகமாவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தொடரைத் தீர்மானிக்கும் முக்கியமான போட்டியில் ஒரு புதுமுக வீரரை களமிறக்க அணி நிர்வாகம் தயங்கியிருக்கலாம். இதன் காரணமாக, அவருக்குப் பதிலாக பிரசித் கிருஷ்ணாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனால், அர்ஷ்தீப்பின் டெஸ்ட் கிரிக்கெட் கனவு தற்காலிகமாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.