பிர்மிங்காம்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், வெற்றி பெறும் நிலையில் இருந்த இந்திய அணி இறுதியில் தோல்வியைச் சந்தித்தது. இந்திய அணியின் பந்துவீச்சு மிகவும் பலவீனமாக இருந்ததும், பந்துவீச்சாளர்களால் விக்கெட்டுகளை எளிதில் வீழ்த்த முடியாததுமே தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த நிலையில், உண்மையான விக்கெட் எடுக்கும் திறன் கொண்ட ஒரு பந்துவீச்சாளரை இந்திய அணி பிளேயிங் லெவனில் சேர்க்காததை ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் சுட்டிக்காட்டியுள்ளார். "அந்த வீரரை கடந்த போட்டியில் ஆட வைத்திருந்தால், அவர் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தி இருப்பார்," என அவர் கூறியுள்ளார்.

மைக்கேல் கிளார்க் குறிப்பிடும் அந்த வீரர், குல்தீப் யாதவ். இந்திய அணியின் சிறந்த சுழற்பந்துவீச்சாளர்களில் ஒருவராக குல்தீப் யாதவ் இருக்கிறார். ஒருநாள் போட்டிகளில் தவிர்க்க முடியாத வீரராக வலம் வரும் அவருக்கு, டெஸ்ட் போட்டிகளில் போதிய முக்கியத்துவம் கிடைக்கவில்லை.
ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சுமார் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்ட் அணியில் ஆதிக்கம் செலுத்தி வந்ததால், குல்தீப் யாதவிற்கு மூன்றாவது சுழற்பந்துவீச்சாளராகவே வாய்ப்பு கிடைத்தது. இதனால், பல போட்டிகளில் அவர் வெளியே அமர வைக்கப்பட்டார்.
ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று இருக்கும் நிலையில் குல்தீப் யாதவிற்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இடம் அளிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வருகின்றன. தற்போது மைக்கேல் கிளார்க்கும் அதையே வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து மைக்கேல் கிளார்க் பேசுகையில், "இந்திய அணியின் பந்துவீச்சுக்காக யாரோ ஒருவரை மட்டும் நாம் குற்றம் சொல்ல முடியாது. ஆனால், இந்திய அணி குல்தீப் யாதவை ஆட வைக்க வேண்டும். அவர் உண்மையிலேயே விக்கெட் எடுக்கக்கூடியவர்."
"கடந்த போட்டியில் குல்தீப் ஆடியிருந்தால் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியிருப்பார். இங்கிலாந்து மண்ணில் சுழற்பந்துவீச்சுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை எனக் கூறப்பட்டாலும், விக்கெட் வீழ்த்தும் ஒரு பந்துவீச்சாளர் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார். ஜடேஜாவால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை."
"இந்திய அணி, தங்களின் பேட்டிங் வரிசையை நீளமாக்குவதில் அதிக கவனம் செலுத்துகிறது. அதற்காக, தங்களின் முதன்மை விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளரை அணியிலிருந்து நீக்குவது குறித்தும் கவலைப்படுவதில்லை. இந்திய அணி, 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தக்கூடிய சிறந்த பந்துவீச்சாளர்களைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்," எனவும் குல்தீப்பை தேர்வு செய்வதன் அவசியம் குறித்து மைக்கேல் கிளார்க் சுட்டிக்காட்டியுள்ளார்.