சென்னை: இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூரை பந்துவீச்சில் சரியாகப் பயன்படுத்தவில்லை என முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் குற்றம் சாட்டியிருக்கிறார். கேப்டன் சுப்மன் கில் அவரை முதல் நாற்பது ஓவர்கள் வரை சரியாகப் பயன்படுத்தாமல் விட்டுவிட்டு, தற்போது அவரை குறை சொல்ல முடியாது எனவும் அஸ்வின் விமர்சனம் செய்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு சராசரியாகவே அமைந்தது. பும்ராவை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் யாரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஷர்துல் தாக்கூர் இரண்டாவது இன்னிங்ஸில் ஒரே ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் பென் டக்கெட் மற்றும் ஹாரி புரூக் என இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சிறிய திருப்பத்தை ஏற்படுத்தியிருந்தார்.

ஆனால், அப்போது இங்கிலாந்து வலுவான நிலையில் இருந்ததால், அது அந்த அணிக்கு பெரிய சரிவை ஏற்படுத்தவில்லை. அந்தச் சிறிய வீழ்ச்சியிலிருந்து இங்கிலாந்து எளிதாகவே மீண்டு வந்து விட்டது. ஆனால், ஷர்துல் தாக்கூர் இரண்டாவது இன்னிங்ஸின் பிற்பகுதியில் ஏற்படுத்திய அந்தத் தாக்கத்தை ஏன் முதல் இன்னிங்ஸிலோ அல்லது இரண்டாவது இன்னிங்ஸின் துவக்கத்திலோ ஏற்படுத்தவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதற்கு காரணம், சுப்மன் கில் அவரை சரியான நேரத்தில் பயன்படுத்தவில்லை என ரவிச்சந்திரன் அஸ்வின் குற்றம் சுமத்தி இருக்கிறார்.
முதல் இன்னிங்ஸில் ஷர்துல் தாக்கூருக்கு 39வது ஓவரில்தான் பந்து வீச வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், ரஞ்சி டிராபியில் மும்பை அணியில் ஷர்துல் புதிய பந்தில் பவுலிங் செய்தவர். அதாவது, போட்டி துவங்கிய உடனே அவர் முதல் ஓவரிலிருந்து பந்து வீசுவார்; அப்போது அவர் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். ஆனால், இந்திய அணியிலோ அவர் நான்காவது வேகப்பந்துவீச்சாளராகத்தான் பயன்படுத்தப்படுகிறார்.
இது பற்றி பேசியிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின், "ஷர்துல் தாக்கூரை நீங்கள் அணியில் தேர்வு செய்துவிட்டு, முதல் 40 ஓவர்களுக்கு அவரைப் பயன்படுத்தாமல் இருந்திருக்கிறீர்கள். ஜோ ரூட் பேட்டிங் செய்தபோது ஷர்துல் தாக்கூரை பந்து வீச வைத்திருக்க வேண்டும். ஏனெனில் இதற்கு முன் அவர் ஜோ ரூட் விக்கெட்டை சில முறை எடுத்து இருக்கிறார்.
ஷர்துல் தாக்கூரை நான் ஒரு நல்ல கிரிக்கெட் வீரராக மதிப்பிடுவேன். அவர் பென் டக்கெட் மற்றும் ஹாரி புரூக் விக்கெட்டை அடுத்தடுத்து வீழ்த்தினார். அவரால் சில தாக்கங்களை ஏற்படுத்த முடியும். ஆனால், அதற்கு அவரை சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும். ஷர்துல் தாக்கூரை நீங்கள் முதல் போட்டியில் பயன்படுத்தியதைப் போலத்தான் இனியும் பயன்படுத்துவீர்கள் என்றால், அதனால் எந்தப் பயனும் ஏற்படாது. நீங்கள் அவரிடம் பந்தைக் கொடுத்தால் தான் அவர் போட்டியில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்துவார்," இவ்வாறு ரவிச்சந்திரன் அஸ்வின் சுப்மன் கில்லை விமர்சித்து இருக்கிறார்.