மான்செஸ்டர்: மான்செஸ்டரில் இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லின் சில முடிவுகள் மற்றும் வியூகங்கள் தவறாக இருந்ததாக முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கடுமையாக விமர்சித்துள்ளார். குறிப்பாக, கடந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை பந்துவீச அழைக்க மிகவும் தாமதம் செய்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மான்செஸ்டரில் நடைபெறும் நான்காவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 669 ரன்களைக் குவித்தது. 311 ரன்கள் முன்னிலை பெற்றது. இந்த நிலையில், இந்திய அணியின் பந்துவீச்சு வியூகங்கள்மற்றும் திட்டங்கள் குறித்து ரவி சாஸ்திரி தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

லார்ட்ஸில் நடந்த முந்தைய டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் வாஷிங்டன் சுந்தர் வெறும் 22 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆனால், மான்செஸ்டர் டெஸ்டில் இங்கிலாந்து அணி 68 ஓவர்கள் வரை பேட்டிங் செய்த பின்னரே சுந்தர் பந்துவீச அழைக்கப்பட்டார். இது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
பந்துவீச வாய்ப்பு கிடைத்த உடனேயே, சுந்தர் சிறப்பாக செயல்பட்டு ஒல்லி போப் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோரின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினார். இதனை அடுத்து கேப்டன் சுப்மன் கில் சுந்தரை முன்னதாகவே பந்துவீச்சில் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்ற விவாதம் எழுந்தது.
இதுகுறித்து ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய ரவி சாஸ்திரி, "ஒரு பந்துவீச்சாளர் கடந்த போட்டியில் நான்கு விக்கெட்டுகளை எடுத்திருக்கிறார். ஆனால், நீங்கள் அவரை 68, 69 ஓவர்களுக்குப் பிறகுதான் பந்துவீச அழைக்கிறீர்கள். இது அந்த வீரருக்கு என்ன மாதிரியான செய்தியைச் சொல்லும்? 'நான் 4 விக்கெட் எடுத்தும், எனக்கு 30-35 ஓவர்களுக்குள் பந்துவீச வாய்ப்பு கிடைக்கவில்லையே' என்று அவர் நினைக்க மாட்டாரா?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "பந்துவீச வந்த பிறகும் அவர்தான் முதல் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். வியூக ரீதியாக இந்திய அணி தவறு செய்துவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது" என்றும் ரவி சாஸ்திரி கூறினார்.
சுந்தர் விஷயத்தில் மட்டுமல்லாமல், வேறு சில முடிவுகளையும் ரவி சாஸ்திரி விமர்சித்தார். அனுபவ வீரர் முகமது சிராஜ் இருக்கும்போது, அறிமுக பந்துவீச்சாளரான அன்ஷுல் கம்போஜை வைத்து புதிய பந்தை வீசத் தொடங்கியது இங்கிலாந்துக்கு சாதகமாக அமைந்துவிட்டது என்றார். மேலும், பவுன்சர் யுக்தியைப் பயன்படுத்த 24 மணி நேரம் தாமதம் செய்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இங்கிலாந்து அணியின் வலுவான பேட்டிங்கிற்கு மத்தியில் ஜோ ரூட் 150 ரன்கள், பென் ஸ்டோக்ஸ் 141 ரன்கள் எடுத்து சிறப்பாக ஆடினர். கேப்டனாக சுப்மன் கில் எடுத்த முடிவுகள் அவர்களை கட்டுப்படுத்தவில்லை. போட்டி இந்தியாவின் கையை விட்டு நழுவ இதுவும் ஒரு காரணமாக அமைந்தது. சுப்மன் கில் ஒரு இளம் கேப்டன் என்றும், அனுபவத்தின் மூலம் கற்றுக்கொள்வார் என்றும் ரவி சாஸ்திரி குறிப்பிட்டாலும், முக்கியமான இந்தத் தொடரில் அவரது சில முடிவுகள் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.