மும்பை: இந்திய டெஸ்ட் அணி விரைவில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கான அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெறுவார் எனச் சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியாகி இருந்தது. விராட் கோலி ஓய்வு பெற்ற நிலையில், அவரது இடத்தில் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் செய்ய அதிக வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்டது.
அவர் கடந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பாதியிலேயே அணியிலிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார். அவருக்கு மீண்டும் அதே இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலேயே வாய்ப்பு கிடைக்கக்கூடும் என ரசிகர்களும் எதிர்பார்த்திருந்தனர்.

ஆனால், அவருக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பு அளிக்கப்படாது என பிசிசிஐ வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. அதற்கு முக்கியக் காரணமாகப் பேட்டிங்கில் அவருக்கு இருக்கும் ஒரு பலவீனம் சுட்டிக்காட்டப்படுகிறது. ஸ்ரேயாஸ் ஐயர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஷார்ட் பந்துகளை எதிர்கொள்ளத் திணறி வந்தார். அதனால் எதிரணிகள் வேகப்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தி ஷார்ட் பந்துகளை வீச வைத்து ஸ்ரேயாஸ் ஐயரின் விக்கெட்டை வீழ்த்தி வந்தன.
சமீபகாலமாக அந்தப் பலவீனத்தை ஸ்ரேயாஸ் ஐயர் தனது பலமாக மாற்றிவிட்டார். அதனால் தான் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அவர் சிறப்பாக விளையாடியிருந்தார். ஆனாலும், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஆடுகளம் இயல்பாகவே அதிகமாக பவுன்ஸ் ஆகும்.
எனவே, ஸ்ரேயாஸ் ஐயரை வெளிநாட்டு டெஸ்ட் தொடரில் ஆட வைத்து ரிஸ்க் எடுக்க முடியாது. அவரை இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட வைத்து, அதன் பிறகு வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட வைக்க முடியும் என்ற முடிவில் தேர்வுக் குழு இருப்பதாகக் கூறப்படுகிறது.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் மூத்த வீரர்கள் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இல்லாததால், உறுதியாக சிறப்பாக விளையாடக்கூடிய வீரர்களை மட்டுமே அழைத்துச் செல்வது என்ற முடிவில் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் இருக்கிறார். எனவே, ஸ்ரேயாஸ் ஐயர் எப்படி விளையாடுவார் என்ற சந்தேகத்துடன் அவரை அழைத்துச் செல்ல விரும்பவில்லை எனவும் கூறப்படுகிறது.
கடந்த ஓராண்டாக ஸ்ரேயாஸ் ஐயர் உள்நாட்டுப் போட்டிகளிலும், ஐபிஎல் தொடரிலும், ஒருநாள் போட்டிகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு இருக்கிறார். ஆனால், தற்போது டெஸ்ட் அணி வாய்ப்பு அவருக்குக் கைக்கு எட்டாத நிலையில் இருக்கிறது.