மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வெல்லும் வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டுள்ளது. மான்செஸ்டரில் நடந்த நான்காவது போட்டியை டிரா செய்ததன் மூலம், தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. கேப்டனாக சுப்மன் கில்லுக்கு இது முதல் தொடராகும் கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே தொடரை சமன் செய்ய முடியும் என்ற நிலையில் இந்திய அணி உள்ளது. இதை அடுத்து பிசிசிஐ அதிரடி முடிவு ஒன்றை எடுத்து இருப்பதாக தகவல் கசிந்து உள்ளது.
கடந்த சில மாதங்களாக கௌதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராகப் பதவியேற்ற பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா தொடர்களை இழந்த நிலையில், இங்கிலாந்து தொடரை வெல்லும் வாய்ப்பையும் தவற விட்டுள்ளது. இதன் காரணமாக, பிசிசிஐ பொறுமை இழந்துள்ளதாகத் தெரிகிறது.

டெலிகிராப் பத்திரிகை தகவலின்படி, இந்திய அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் மற்றும் துணைப் பயிற்சியாளர் ரியான் டென் டோஸ்சேட் ஆகியோரை நீக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இங்கிலாந்து தொடர் முடிந்ததும் இதுகுறித்த ஆய்வு நடத்தப்படும்.
செப்டம்பரில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை 2025 வரை கால அவகாசம் குறைவாக இருப்பதால், இந்த மாற்றங்கள் தாமதமாகலாம். இருப்பினும், அக்டோபரில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான அடுத்த டெஸ்ட் தொடருக்கு முன் இந்த மாற்றங்கள் நிச்சயமாக நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதே போல மோர்கல் மற்றும் ரியான் நீக்கப்பட அதிக வாய்ப்பு உள்ளது. இந்திய அணியில் வீரர்கள் அளவில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருவதால், தலைமைப் பயிற்சியாளர் பதவியில் மாற்றம் எதையும் பிசிசிஐ விரும்பவில்லை. எனவே, கௌதம் கம்பீர் தனது பதவியில் தொடர்வார்.
பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் சில காலமாகவே பிசிசிஐ-யின் கண்காணிப்பில் இருந்து வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில், புதுப் பந்தில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் மட்டுமே பந்துவீசிய அன்ஷுல் கம்போஜை விளையாட வைத்த முடிவு, அவரது பதவிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
உலகத் தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவை அணியில் சேர்க்காததும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. இது குறித்து பிசிசிஐ அதிகாரி ஒருவர், "பயிற்சியாளர்கள் எப்போதும் அணியின் சமநிலை பற்றி பேசுகிறார்கள். ஆனால், குல்தீப் யாதவ் போன்ற ஒரு சிறந்த வீரரை வெளியே வைத்திருப்பது இந்திய அணிக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது" என்று கூறியுள்ளார்.
மோர்னே மோர்கல் மற்றும் டென் டோஸ்சேட் ஆகிய இருவரும் கடந்த ஆண்டு கம்பீரால் அவரது பயிற்சியாளர் குழுவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போதே பிசிசிஐ உயர் அதிகாரிகள் அவர்கள் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். ஆனால், கம்பீரின் பிடிவாதத்தால் அவர்கள் இந்திய அணியில் பயிற்சியாளர்கள் குழுவில் இடம் பெற்றனர். தற்போது இந்திய அணியின் தொடர்ச்சியான மோசமான டெஸ்ட் முடிவுகளால், அவர்களை நீக்க பிசிசிஐ தயாராகி வருவதாகத் தெரிகிறது.