லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என சமன் செய்து கோப்பையைத் தக்க வைத்துக்கொண்டது. இந்தத் தொடரின் கடைசிப் போட்டியில் ஓவல் மைதானத்தில் பெற்ற த்ரில் வெற்றி, இந்திய ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.
இந்த வெற்றியின் பின்னணியில் பல இளம் வீரர்களின் பங்களிப்பு இருந்தாலும், ஒருவர் மட்டும் தனித்து நிற்கிறார். அவர்தான் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான துருவ் ஜூரல். ஆக்ராவைச் சேர்ந்த இந்த இளம் வீரர், இந்திய அணிக்காக விளையாடிய எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் அணி தோல்வியைச் சந்தித்ததில்லை என்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

துருவ் ஜூரல் இதுவரை இந்திய அணிக்காக 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆச்சரியப்படும் விதமாக அந்த அனைத்து போட்டிகளிலும் இந்திய அணி வெற்றியையே ருசித்துள்ளது. இதன் மூலம், குறைந்தபட்சம் ஐந்து போட்டிகளில் விளையாடி, அனைத்திலும் வெற்றி பெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். ஒட்டுமொத்தமாக, வெஸ்ட் இண்டீஸின் எல்டின் பாப்டிஸ்ட் 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி அனைத்திலும் வெற்றி பெற்று இந்தச் சாதனையைத் தன்வசம் வைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட் காயம் காரணமாக வெளியேறியதால், துருவ் ஜூரலுக்கு விக்கெட் கீப்பிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்ட அவர், வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளத்தில் தனது கீப்பிங் திறமையால் அனைவரையும் கவர்ந்தார்.
குறிப்பாக, போட்டியின் கடைசி நாளில் முகமது சிராஜ்-இன் பந்துவீச்சில் ஜேமி ஸ்மித்-தின் விக்கெட்டை கேட்ச் பிடித்து ஆட்டத்தின் திருப்புமுனைக்கு வித்திட்டார். மேலும், நெருக்கடியான நேரத்திலும் நிதானமாகச் செயல்பட்டு கேப்டன் சுப்மன் கில் மற்றும் சக வீரர்களுக்கு ஆலோசனைகளை வழங்கியது பாராட்டுகளைப் பெற்றது.
துருவ் ஜூரலின் பயணம் அவ்வளவு எளிதானதாக இருந்திருக்கவில்லை. கார்கில் போரில் பணியாற்றிய ராணுவ வீரரின் மகனான இவர், கிரிக்கெட் மீது கொண்ட தீராத காதலால் பல தடைகளைத் தாண்டி வந்துள்ளார். தனது 14 வயதில், கிரிக்கெட் பயிற்சிக்காக ஆக்ராவிலிருந்து நொய்டாவுக்குத் தனியாகப் பயணம் செய்தார்.
அப்போது, அவரது தந்தை கடன் வாங்கி காஷ்மீர் வில்லோ பேட் வாங்கிக் கொடுத்ததும், அவரது தாய் தனது ஒரே தங்கச் சங்கிலியை அடகு வைத்து கிரிக்கெட் கிட் பேக் வாங்கிக் கொடுத்தார். உள்ளூர் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜூரல், 2020ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
2024ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார். தனது இரண்டாவது டெஸ்ட் போட்டியிலேயே, ராஞ்சியில் நடந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் 90 ரன்கள் குவித்து இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டார். இரண்டாவது இன்னிங்ஸில் 39 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். அந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதையும் வென்றார்.
ரிஷப் பண்ட் போன்ற ஒரு அதிரடி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனுக்கு மாற்று வீரராக அணியில் இடம்பிடித்து, கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி, நெருக்கடியான நேரங்களில் தனது நிதானமான ஆட்டத்தால் அணியின் வெற்றிக்குத் துருவ் ஜூரல் பங்களித்து வருவது, இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் பிரகாசமாக இருப்பதையே காட்டுகிறது.