லண்டன்: இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான டெண்டுல்கர்-ஆண்டர்சன் கோப்பைக்கான கடைசி டெஸ்ட் போட்டி, இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருந்ததை பார்த்த ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமும் விராட் கோலி அணியில் இல்லாததை உணர்ந்துள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் எம்பியும், தீவிர கிரிக்கெட் ஆர்வலருமான சசி தரூர், விராட் கோலியை இந்தத் தருணத்தில் நினைத்து மிகவும் உருக்கமாகப் பதிவிட்டுள்ளார். "நாடு உங்களை அழைக்கிறது விராட், திரும்பி வாருங்கள்" என்று அவர் விடுத்துள்ள கோரிக்கை, சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி டெஸ்டில், இங்கிலாந்து அணிக்கு 374 ரன்கள் என்ற கடினமான இலக்கை இந்திய அணி நிர்ணயித்தது. ஆனால், இங்கிலாந்து பேட்ஸ்மேன்களான ஹாரி ப்ரூக் மற்றும் ஜோ ரூட் ஆகியோரின் அபாரமான சதங்களால், இங்கிலாந்து அணி எளிதாக வெற்றி இலக்கை நெருங்கியது.

ஹாரி ப்ரூக் மற்றும் ஜோ ரூட் நான்காவது விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்து, இந்திய பந்துவீச்சை சிதறடித்தனர். இந்த இக்கட்டான சூழலில், களத்தில் விராட் கோலி போன்ற ஒரு ஆக்ரோஷமான, உத்வேகம் அளிக்கக்கூடிய வீரர் இல்லையே என்ற ஏக்கம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில், காங்கிரஸ் தலைவர் சசி தரூர் தனது 'எக்ஸ்' (X) சமூக வலைதளப் பக்கத்தில், "இந்தத் தொடர் முழுவதும் நான் விராட் கோலியை மிஸ் செய்தேன். ஆனால், இந்த டெஸ்ட் போட்டியைப் போல அவரை நான் ஒருபோதும் மிஸ் செய்ததில்லை," என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் அவர், "அவரது மன உறுதி, களத்தில் அவர் காட்டும் தீவிரம், உத்வேகம் அளிக்கக்கூடிய அவரது இருப்பு, இவற்றுடன் அவரது அளப்பரிய பேட்டிங் திறனும் சேர்ந்திருந்தால், போட்டியின் முடிவு வேறுவிதமாக இருந்திருக்கலாம். ஓய்விலிருந்து அவரை மீண்டும் அழைக்க இது சரியான நேரமா? விராட், இந்த நாட்டுக்கு நீங்கள் தேவை!" என்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் மாபெரும் சாம்பியன்களில் ஒருவரான விராட் கோலி, கடந்த மே மாதம் 12-ஆம் தேதி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 123 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 46.85 என்ற சராசரியுடன் 9,230 ரன்கள் குவித்துள்ளார். இதில் 30 சதங்களும், 31 அரைசதங்களும் அடங்கும்.
ஓய்வு குறித்து கோலி அப்போது குறிப்பிடுகையில், "டெஸ்ட் கிரிக்கெட் எனக்கு வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொடுத்துள்ளது. வெள்ளை உடையில் விளையாடுவதில் ஒரு தனிப்பட்ட உணர்வு இருக்கிறது. அந்த அமைதியான உழைப்பு, நீண்ட நாட்கள், யாருமே பார்க்காத சிறிய தருணங்கள், என்றென்றும் உங்களுடன் இருக்கும்," என்று நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.
இங்கிலாந்துக்கு எதிரான இந்தத் தொடரில் இந்திய அணி தடுமாறும் ஒவ்வொரு தருணத்திலும், களத்தில் கோலியின் ஆக்ரோஷமான அணுகுமுறையையும், பேட்டிங்கில் அவரது ஆதிக்கத்தையும் ரசிகர்கள் பெரிதும் இழந்து தவிக்கின்றனர். சசி தரூரின் இந்த பதிவு, கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் மனக்குமுறலாகவே பார்க்கப்படுகிறது.