சென்னை : இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற கேப்டன் சூரியகுமார் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் வேகப்பந்துவீச்சை அபாரமாக எதிர்கொள்வதை உணர்ந்த சூரியகுமார், ஐந்து சுழற் பந்துவீச்சாளர்களை இந்த போட்டியில் பயன்படுத்தினார்.

அதிகபட்சமாக ஜாஸ் பட்லர் 45 ரன்களும்பிரைடன் கார்ஸ் 31 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் ரன் சேர்க்க தடுமாறினர். இதனால் 20 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிதிற்கு 165 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அக்சர் பட்டேல், வருண் சக்கரவர்த்தி தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினர்.
இதனை அடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடி 12 ரன்கள் எடுத்திருந்தபோது மார்க்
வுட் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். இதேபோன்று சஞ்சு சாம்சன் ஐந்து ரன்களில் வெளியேற கேப்டன் சூரியகுமார் யாதவும் 3 பவுண்டரிகள் அடித்து 12 ரன்கள் எடுத்த போது பிரைடல் கார்ஸ் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட துருவ் ஜூரல் நான்கு ரன்களிலும், ஹர்திக் பாண்டியா 7
ரன்களிலும் அடுத்தடுத்து வெளியேற இந்திய அணி சரிவை நோக்கி சென்றது. ஒரு முனையில் விக்கெட் விழுந்தாலும் மறுமுனையில் திலக் வர்மா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மற்ற வீரர்கள் எல்லாம் சிக்ஸர்கள் அடிக்க முற்பட்டு பெவிலியன் திரும்ப, திலக் வர்மா மட்டும் சூழலை உணர்ந்து கொண்டு பந்துக்கு ஏற்றார் போல் விளையாடினார்.
இவருக்கு தமிழக கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தரும் நல்ல கம்பெனி கொடுத்தார். வாஷிங்டன் சுந்தர் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் என 19 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார். ஒரு கட்டத்தில் வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்க , ஆர்ஸ்தீப் சிங் தேவை இல்லாத ஷார்ட் அடி வெளியேறினார். இதனால் இந்திய அணி வெற்றிக்கு 18 பந்துகளில் 20 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் இரண்டு விக்கட்டுகள் தான் இருந்தது.
அப்போது திலக் வர்மாவுடன் ஜோடி சேர்ந்த ரவி பிஷ்னாய் அவருக்கு உறுதுணையாக நிற்க ரசிகர்கள் கொஞ்சம் நிம்மதி அடைந்தனர். ரவி பிஷ்னாய் தன் பங்கிற்கு இரண்டு பவுண்டரிகள் அடிக்க இந்தியாவுக்கு தேவைப்பட்ட இலக்கு குறைந்தது. இந்த சூழலில் கடைசிவரை ஆட்டமிழக்காமல் நின்ற திலக் வர்மா 55 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். இதில் 5 சிக்சர்கள் நான்கு பௌண்டரிகள் அடங்கும். இதன் மூலம் நான்கு பந்துகள் எஞ்சிய நிலையில் இந்திய அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் சென்னையில் நடைபெற்ற சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணி தங்களுடைய இரண்டாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது.