மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மா 55 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, கடைசிவரை பவுலருடன் நின்று இந்திய அணிக்கு திலக் வர்மா வெற்றியை தேடித் தந்தார்.
இதனால் திலக் வர்மாவை பல முன்னாள் வீரர்கள் பாராட்டி இருக்கிறார்கள். விராட் கோலி t20 கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், தற்போது திலக் வர்மா அவருடைய இடத்தை பிடித்திருப்பதாக பலரும் பாராட்டியுள்ளனர்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வின், ஆட்டத்தை வெல்லக்கூடிய ஒரு இன்னிங்ஸ். கடும் நெருக்கடியை அபாரமாக கையாண்டு இருக்கிறார். சிறப்பான முடிவை எடுத்திருக்கிறார். எந்த நேரத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று இவருக்கு நன்றாக தெரிகிறது என திலக் வர்மாவை அஸ்வின் பாராட்டியுள்ளார்.
இதேபோன்று முன்னாள் கிரிக்கெட் வீரர் வசீம் ஜாபர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பிரமாதமான இன்னிங்ஸை திலக் வர்மா ஆடியிருக்கிறார். இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 78 ரன்கள் எடுத்திருந்தபோது கொஞ்சம் கூட பதற்றமே இல்லாமல் கடைசிவரை நின்று வெற்றியைத் தேடித் தந்திருக்கிறார்.
குறிப்பாக 16வது ஓவரில் ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் 19 ரன்கள் அடித்தது தான் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்தியிருக்கிறது என்று பாராட்டியுள்ளார். அதேபோன்று முன்னாள் வீரர் மனோஜ் திவாரி வெளியிட்டுள்ள பதிவில், திலக் வர்மாவின் ஆட்டத்தை ஒரே வரியில் சொல்ல இந்த புகைப்படம் போதும்.
அபாரமான இன்னிங்ஸை திலக் வர்மா ஆடி இருக்கிறார். இந்திய கிரிக்கெட்டின் அடுத்த மிகப்பெரிய வீரர் இவர்தான் என்று பாராட்டியுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக திலக் வர்மா டி 20 போட்டிகளில் இரண்டு சதம் அடித்த நிலையில் தற்போது இங்கிலாந்துக்கு எதிராகவும் அபாரமாக விளையாடி இருக்கிறார். இதனால் திலக் வர்மாவை சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டிலும் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.