சென்னை : இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியின் விளிம்பில் இருந்தபோது இளம் வீரர் திலக் வர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெற வைத்தார். 55 பந்துகளை எதிர்கொண்ட அவர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் எடுத்தார்.
இதில் 5 சிக்சர்களும்,நான்கு பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் திலக் வர்மா ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார். இந்த நிலையில் தன்னுடைய செயல்பாடு குறித்து திலக் வர்மா பேசியதை தற்போது பார்க்கலாம்.

ஆடுகளத்தில் பவுன்ஸ் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. நேற்று நான் கம்பீரிடம் எனது பேட்டிங் குறித்து பேசினேன். அப்போது களத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும். சூழலுக்கு ஏற்ப உங்கள் பேட்டிங்கை நீங்கள் விளையாடுங்கள் என்று அவர் எனக்கு அட்வைஸ் கொடுத்தார். அதாவது தற்போது அணிக்கு ஒரு ஓவருக்கு 10 ரன்கள் தேவைப்பட்டால் நான் அதிரடியாக விளையாட வேண்டும்.
இல்லை என்றால் மற்றவர் அதிரடி காட்ட வேண்டும். நான் கடைசிவரை களத்தில் நிற்க வேண்டும். இதுதான் எங்களுடைய ஐடியாவாக இருந்தது. இதேபோன்று களத்தில் இடது கை வலது கை பேட்ஸ்மேன்கள் நிற்க வேண்டும் என்பது குறித்தும் நாங்கள் பேசினோம். தென்னாப்பிரிக்காவிலும் நாங்கள் இதேபோல் ஒரு ஆட்டத்தை தான் வெளிப்படுத்தினோம்.
இங்கிலாந்து வீரர்கள் நல்ல வேகத்துடன் பந்து வீசினார்கள். இதற்காக நாங்கள் தயாராக இருந்தோம். ஆர்ச்சர் மற்றும் மார்க் வுட் பந்துவீச்சை எதிர்கொள்ள நாங்கள் முன்பே பயிற்சி எடுத்தோம். வலை பயிற்சியில் நாங்கள் தீவிரமாக பேட்டிங் செய்தோம். இதன் மூலம் எங்களுக்கு நல்ல முடிவுகள் கிடைத்து இருக்கிறது. ரவி பிஸ்னாய் அடித்த பவுண்டரிகள் என்னுடைய நெருக்கடியை குறைத்தது.இது உண்மையிலேயே சிறந்த விஷயம். அவர் என்னுடன் நின்றதன் மூலம் நாங்கள் சுலபமாக வெற்றியை எட்டினோம் என்று திலக் வர்மா கூறியுள்ளார்.