சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் திலக் வர்மாவை டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளிலும் சேர்க்க வேண்டும் என முன்னாள் சிஎஸ்கே வீரர் அம்பத்தி ராயுடு வலியுறுத்தி இருக்கிறார். இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் திலக் வர்மா தனி ஆளாக நின்று இந்திய அணியை வெற்றி பெற வைத்தார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சிஎஸ்கேவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் அம்பத்தி ராயுடு, "திலக் வர்மா இந்திய கிரிக்கெட்டின் புதிய சூப்பர் ஸ்டார்.அவர் ஹைதராபாத்தில் வளர்ந்து வரும் கிரிக்கெட் வீரராக இருந்தபோதே நான் பார்த்திருக்கிறேன்".

"இந்திய அணிக்காக தற்போது அவர் நான்கு மிகப் பிரமாதமான இன்னிங்சை வெளிப்படுத்தி இருக்கிறார். சூரியகுமார் யாதவும் கேப்டன் ஆன பிறகு திலக் வர்மாவின் நம்பிக்கை உத்வேகம் அதிகரித்து இருக்கிறது. அதற்கு காரணம் கேப்டன் திலக் வர்மா மீது அதிக நம்பிக்கை வைத்திருக்கிறார்.இதற்கு தற்போது திலக் வர்மா தனது பேட்டிங் மூலம் நன்றி கடன் செலுத்தி வருகிறார்".
"தற்போது இந்திய அணிக்கு மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் கிடைத்து இருக்கிறார். இந்திய டி20 அணியில் மட்டுமல்லாமல் ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் திலக் வர்மாவை சேர்க்க வேண்டும். அதற்கான பக்குவத்தை திலக் வர்மா வெளிப்படுத்தி இருக்கிறார். இந்திய அணிக்காக பல போட்டிகளை வென்று கொடுக்கும் உத்வேகமும், திறனும் திலக் வர்மாவிடம் இருக்கின்றது".
"எனவே இனி இந்தியா விளையாடப் போகும் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் திலக் வர்மாவை சேருங்கள். திலக் வர்மாவுக்கு எதிராக இங்கிலாந்து அணி வீரர்கள் ஷார்ட் பாலை பயன்படுத்தினார்கள். ஆனால் அதற்கும் திலக் வர்மா தனது பேட்டிங்கில் விடை வைத்திருந்தார்".
"வேகபந்து வீச்சை அபாரமாக திலக் வர்மா எதிர்கொள்கிறார்.பேட்டிங்கில் சிக்ஸர்கள் அடிக்க கோணத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். வேகப்பந்து வீச்சாளரின் வேகத்தை அவர் சரியாக பயன்படுத்தி ரன்களை சேர்க்கிறார். எனவே சென்னையில் அவருக்கு பந்து வீசியது போல் இனி இங்கிலாந்து வீரர்கள் அடுத்தடுத்த போட்டிகளில் வீசமாட்டார்கள் என நினைக்கின்றேன்" என்று அம்பத்தி ராயுடு கூறியுள்ளார்.