லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் தற்போது முடிவடைந்து இருக்கின்றது. இந்த தொடரில் இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகளை பெற்ற நிலையில், ஒரு போட்டி சமனில் முடிவடைந்தது.
இதனால் தொடரும் சமனானது. விராட் கோலி, ரோஹித் சர்மா, முகமது சமி, அஸ்வின் உள்ளிட்ட எந்த சீனியர் வீரர்களும் இல்லாமல் இந்திய அணி இந்த தொடரில் களமிறங்கியது. இளம் வீரர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு இந்த தொடர் ஒரு இன்ப அதிர்ச்சியாகவே இருந்துள்ளது.

பல்வேறு புதிய நட்சத்திரங்கள், எதிர்காலத்திற்கான வீரர்களை இந்த தொடர் அடையாளம் காண்பித்துள்ளது. இந்த சூழலில் நடந்து முடிந்த ஆண்டர்சன் டென்டல்கர் கோப்பை தொடரில் அதிக ரன்கள், அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர்கள் பற்றி தற்போது பார்க்கலாம். இந்த தொடரில் நான்கு சதம் அதில் ஒரு இரட்டை சதம் என கில் பட்டையை கிளப்பி இருக்கிறார்.
இந்திய பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பு:
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு கேப்டனாக அதிக ரன்கள் குவித்த வீரர் என்று பெருமையை கில் படைத்து இருக்கின்றார். கில் 754 ரன்கள் அடித்ததால் அவருக்கு தொடர் நாயகன் விருதும் கிடைத்திருக்கின்றது. இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் ராகுல். இந்த தொடரில் இரண்டு சதம் அடித்துள்ள ராகுல் தொடக்க வீரராக இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார்.அவர்
532 ரன்கள் அடித்திருக்கின்றார்.
இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் ஜடேஜா. அஸ்வின் ஓய்வு பெற்றபோது ஜடேஜாவும் ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று பலரும் விமர்சித்திருந்தனர். ஆனால் அவர்களுக்கு தனது பேட்டிங் மூலம் பதிலடி கொடுத்திருக்கின்றார் ஜடேஜா. இந்த தொடரில் ஜடேஜா 516 ரன்கள் குவித்து அணிக்கு ஒரு முதுகெலும்பாகவே இருந்திருக்கின்றார்.
இந்த பட்டியலில் நான்காம் இடத்தை பிடித்திருப்பவர் ரிஷப் பண்ட், காயம் காரணமாக ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை என்றாலும்,ரிஷப் பண்ட் வழக்கம் போல் இந்த தொடரில் பட்டையை கிளப்பினார். குறிப்பாக ஒரே டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்சில் சதம் அடித்து பந்த் அசத்தினார். இந்த தொடரில் பண்ட் 479 ரன்கள் குவித்து இருக்கின்றார்.
அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியல்:
இதேபோன்று இந்திய அணியின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வாலும், இந்த தொடரில் சாதித்து காட்டி இருக்கின்றார். முதல் டெஸ்டில் சதம், ஐந்தாவது டெஸ்டில் சதம் என மொத்தமாக அவர் 411 ரன்கள் குவித்து இருக்கின்றார். இந்தப் பட்டியலில் ஆறாவது இடத்தில் வாஷிங்டன் சுந்தர் இருக்கின்றார். நான்காவது மற்றும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தர் ஆடிய ஆட்டம் தான் இந்த தொடரை இந்தியா சமன் செய்ததற்கு காரணமாக அமைந்தது. சுந்தர் 284 ரன்கள் அடித்துள்ளார்.
இதேபோன்று பவுலர்களுக்கான பட்டியலில் முகமது சிராஜ் 5 டெஸ்டுகளிலும் விளையாடி 23 விக்கெட்டுகள் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார். இந்த தொடரில் வெறும் மூன்று டெஸ்ட் போட்டிகள் விளையாடிய பும்ரா 14 விக்கெட் வீழ்த்தி இரண்டாவது இடத்திலும், பிரசித் கிருஷ்ணாவும் 14 விக்கெட்டுகளை வீழ்த்தி மூன்றாம் இடத்திலும், ஆகாஷ் தீப் 13 விக்கெட் வீழ்த்தி நான்காம் இடத்திலும் உள்ளனர்.