ராஜ்கோட்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி மூன்று அரிய சாதனைகளை செய்து இருக்கிறார். அதிலும் உலகிலேயே இதுவரை எந்த பந்து வீச்சாளரும் செய்யாத டி20 சாதனையை அவர் செய்து இருக்கிறார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டியில் அவர் 4 ஓவர்களில் 24 ரன்களை விட்டு கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தினார். தனது கிரிக்கெட் வாழ்வில் அவர் இரண்டாவது முறையாக சர்வதேச டி20 போட்டிகளில் ஐந்து விக்கெட் ஹால் (Haul) சாதனையை செய்து இருக்கிறார்.

இந்திய அணியில் இதுவரை குல்தீப் யாதவ் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகிய இரண்டு பந்துவீச்சாளர்கள் மட்டுமே சர்வதேச டி20 போட்டிகளில் இரண்டு முறை ஐந்து விக்கெட்களை வீழ்த்தி உள்ளனர். அவர்களையும் விட குறைந்த போட்டிகளில் வருண் சக்கரவர்த்தி இரண்டு முறை இந்த நிகழ்வை செய்து இருக்கிறார்.
மேலும், வெறும் 16 டி20 போட்டிகளில் மட்டுமே ஆடி இருக்கும் நிலையில் அவர் இரண்டு முறை டி20 போட்டிகளில் 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்து இருக்கிறார். மேலும், இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்த நிலையில் 5 விக்கெட் வீழ்த்தி இருந்தார் வருண் சக்கரவர்த்தி. யாரும் செய்யாத சதானையாக இது மாறி உள்ளது.
இதற்கு முன் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 போட்டியிலும் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அப்போதும் இந்திய அணி தோல்வி அடைந்து இருந்தது. இதன் மூலம் இரண்டு தோல்வியடைந்த போட்டிகளில் 5 விக்கெட்களை வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் என்ற உலக சாதனையை செய்து இருக்கிறார் வருண் சக்கரவர்த்தி.
மேலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த டி20 தொடரில் அவர் இதுவரை 10 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். இதன் மூலம் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இருதரப்பு டி20 தொடரில் முதல் முறையாக 10 விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையையும் செய்து இருக்கிறார் வருண் சக்கரவர்த்தி.
இந்த போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்து இருந்தது. வருண் சக்கரவர்த்தி ஒரு பக்கம் விக்கெட்களை வீழ்த்திய போதும் இங்கிலாந்து அணி அதிரடியாக ஆடி ரன் சேர்த்தது. அடுத்து ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது.