இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தமிழக கிரிக்கெட் வீரர் வருண் சக்கரவர்த்தி ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் இன்று நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருப்பதாலும் பனிப்பொழிவு அதிகமாக இருப்பதாலும்,கேப்டன் சூரியகுமார் யாதவும் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் இங்கிலாந்து அணியில் உள்ள 11 வீரர்களும் பேட்டிங் செய்யக்கூடியவர்களாக இருப்பதால், அவர்களுடைய விக்கெட்டை வேகமாக வீழ்த்தினால் மட்டுமே குறைந்த ஸ்கோரில் இந்திய அணியால் சுருட்ட முடியும். இதனால் விக்கெட்டுகள் எடுப்பதற்காக இந்தியா ஆரம்பம் முதலில் இருந்து கடும் முயற்சிகளை செய்து வந்தது.ஆர்ஸ்தீப் சிங் அபாரமாக பந்து வீசி இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் விக்கெட்டை அடுத்தடுத்து வீழ்த்தினார்.
எனினும் கேப்டன் ஜாஸ் பட்லருடன் ஜோடி சேர்ந்த ஹாரி புரூக் அபாரமாக விளையாடி இங்கிலாந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இந்த ஜோடி குறைந்த நேரத்தில் வேகமாக ரன்களை சேர்க்கக்கூடிய வல்லமை பெற்றது என்பதால் இந்த ஜோடியை பிரிக்கும் விதமாக இந்திய அணி வருண் சக்கரவர்த்தியை பந்து வீச அழைத்தது. ஹாரி புருக் 14 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த நிலையில் வருண் சக்கரவர்த்தியின் பந்து வீச்சில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார்.
இதனை அடுத்து ஒரு பந்து இடைவெளியில் இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் லிவிங்ஸ்டோன் விக்கெட்டையும் வருண் சக்கரவர்த்தி டக் அவுட் ஆக்கினார். இது ஆட்டத்தில் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியது. இதன் மூலம் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டு களை வருண் சக்கரவர்த்தி கைப்பற்றினார்.
இதனால் இங்கிலாந்து அணி 65 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஆர்ஸ்தீப் சிங் ஓவர் மட்டும்தான் ஆடுகளத்தில் எடுபட்டது. ஹர்திக் பாண்டியா ஓவர்களை இங்கிலாந்து வீரர்கள் எளிதாக எதிர்கொண்டு ரன்களை சேர்க்க வருண் சக்கரவர்த்தி தன்னுடைய பந்து வீச்சு மூலம் இங்கிலாந்து அணியின் ரன் குவிக்கும் வேகத்தை கட்டுப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.