மும்பை: டி20 உலககோப்பை அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தை இந்திய அணி எதிர்கொள்கிறது. இந்த சூழலில் இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி மும்பையின் கடும் வெயிலில் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார். சமீபத்திய போட்டிகளில் அவரது பந்துவீச்சில் சற்று தடுமாற்றம் தெரிந்தாலும், நடு ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றும் அவரது திறன் அணிக்கு மிகவும் அத்தியாவசியமானது.
கடந்த ஓராண்டாக, போட்டியின் நடு ஓவர்களில் விக்கெட் வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றிய முக்கிய பந்துவீச்சாளராக வருண் செயல்பட்டுள்ளார். தனது பந்துவீச்சு வேகத்தை அதிகரித்தும், சைட்-ஸ்பின்னுக்குப் பதிலாக ஓவர்-ஸ்பின் நுட்பத்தைப் பயன்படுத்தியதிலிருந்தும் அவரது செயல்திறன் கணிசமாக உயர்ந்துள்ளது. ஸ்டம்புகளை குறிவைத்தும், தொடர்ந்து தடுமாற வைப்பது அவரது சிறப்பம்சமாகும்.

கடந்த ஆண்டு 13.19 என்ற சராசரியுடனும், 7.08 என்ற சிக்கன விகிதத்துடனும் 36 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அவர் அசத்தினார். டி20 உலகக் கோப்பையின் ஆரம்ப கட்டங்களில் மிரட்டலாகச் செயல்பட்ட வருண், சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிகளில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்து சற்று தடுமாறினார்.
இதனால், அரையிறுதிக்கு தீவிர பயிற்சியில் வருண் சக்கரவர்த்தி ஈடுபட்டு வருகிறார். பகல் நேர வெயிலிலும் தனது திறமைகளை மேம்படுத்த விரும்பினார். அவர் லென்த் பந்துவீச்சில் கவனம் செலுத்தி, சரியான திட்டத்துடன் பந்துவீச முயற்சித்தார். சில நேரங்களில் ஸ்டம்புகளை நேரடியாகக் குறிவைத்தும், சில நேரங்களில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்துவீசியும் பயிற்சி செய்தார்.
அணியின் ஊழியர்களான டி. திலீப், மோர்னே மோர்கல், ரியான் டென் டோஸ்கேட் மற்றும் சிடன்ஷு கோடக் ஆகியோர் வருண் சக்கரவர்த்தியுடன் நீண்ட நேரம் கலந்துரையாடினர். இங்கிலாந்து அணியின் வலுவான பேட்ஸ்மேனான ஹாரி ப்ரூக்குடன் வருண் மோதும் முக்கியப் போட்டி அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும்.
இது குறித்து பேசிய பந்துவீச்சுப் பயிற்சியாளர் மோர்னே மோர்கல், "வருணுடன் இது வழக்கமான பயிற்சி தான். போட்டிக்கு முந்தைய நாள் சிங்கிள் விக்கெட் பயிற்சி செய்வது அவருக்கு மனரீதியாக மிகவும் பிடிக்கும். நாங்கள் பேசியதெல்லாம் பந்துவீச்சில் தெளிவு பற்றியும், அவர் சிறப்பாக உணர்வது பற்றியும்தான்."
"இது பதில் சொல்லக் கடினமான கேள்வி. அவரது செயல்முறையை நான் வெளிப்படுத்த முடியாது. ஆனால், எங்கள் பந்துவீச்சு அணியில், வருண் கொண்டுள்ள திறன் மற்றும் மாறுபாடுகளுடன், கிட்டத்தட்ட ஒவ்வொரு பந்திலும் விக்கெட்டுகளை வீழ்த்தும் வல்லமை அவருக்கு உள்ளது. அவர் பவுண்டரிக்குச் சென்றாலோ அல்லது பந்தை சரியாகப் பயன்படுத்தாவிட்டாலோ அதை அவர் சரியாகச் செயல்படுத்தவில்லை என்று அர்த்தம்."
"வருண் அடுத்த பந்தைப் பற்றி மட்டுமே சிந்தித்து, அதை முழு ஈடுபாட்டுடன் வீசுவதுதான் அவருக்கு முக்கியம். அவர் மிகவும் திறமையான பந்துவீச்சாளர் என்றும், கிரீஸுக்குள் வந்ததும் அவரது பந்துவீச்சைக் கணிப்பது கடினம் என்றும் நான் நினைக்கிறேன்.எனவே, பந்துவீச்சில் நம்பிக்கையைப் பெறுவதும், தனது வேகம், லென்த், கட்டுப்பாடு ஆகியவற்றைச் சரிசெய்வதும், அதிகமாக யோசிக்காமல் இருப்பதும் அவருக்கு அவசியம்" என்றார் மோர்கல்.
"வருண் சில சமயங்களில் தன்னால் முடிந்த சிறந்த பங்களிப்பை அணிக்கு வழங்க வேண்டும் என்று நினைப்பார், இதனால் அவர் தன்னைத்தானே கொஞ்சம் அழுத்தத்திற்கு உள்ளாக்கிக் கொள்கிறார். ஆனால், அவர் எங்களுக்கு ஒரு மேட்ச் வின்னர். அவர் ஒவ்வொரு பந்தையும் மன உறுதி குலையாமல் வீசி, அது தனது சிறந்த பந்து என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்" என்றும் மோர்கல் தெரிவித்தார்.

"சிவம் எப்போதும் அணிக்கு ஒன்று அல்லது இரண்டு ஓவர்களை வழங்கக்கூடியவர். அவருக்கு மிக முக்கியமானது பந்துவீசும்போது புத்திசாலித்தனமான முடிவுகளை எடுப்பதாகும். அவரது பந்துவீச்சுத் திட்டத்தை மேம்படுத்த நாங்கள் விரும்புகிறோம். எதிரணிகள் அவரை குறிவைக்கும்போது, விக்கெட்டுகளை வீழ்த்த எங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். எனவே, பந்து கையில் இருக்கும்போது சிந்திக்கும் திறன் மேம்பட்டால் சிறப்பாக இருக்கும்" என்று மோர்கல் விளக்கினார்.