ராஜ்கோட் : இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கக் கூடிய வருண் சக்கரவர்த்தி அபாரமாக பந்து வீசினார். நான்கு ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த வருண் சக்கரவர்த்தி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதன் மூலம் இங்கிலாந்து அணி 127 ரன்கள் 8 விக்கெட் இழந்து தடுமாறியது. எனினும் கடைசியில் இங்கிலாந்து வீரர்கள் ரன்களை குவித்து 171 ரன்கள் எடுத்தனர். இதன் மூலம் ஐந்து விக்கெட்டுகளை இரண்டு முறை வருண் சக்கரவர்த்தி எடுத்தும் இரண்டு முறையும் இந்தியா தோற்று இருக்கிறது.

இந்த நிலையில் வருண் சக்கரவர்த்திக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வருண் சக்கரவர்த்தி," நாங்கள் (மூன்றாவது டி20 ) இந்த போட்டியில் வெற்றி பெறாதது வருத்தம் அளிக்கிறது. ஆனால் இதுதான் டி20 கிரிக்கெட்டின் இயல்பு. இந்த தோல்வியிலிருந்து நாங்கள் நகர்ந்து அடுத்த போட்டி நோக்கி செல்ல வேண்டும்".
" நாட்டுக்காக நாம் விளையாடும் போது பல பொறுப்புகளை எடுத்துக்கொண்டு விளையாட வேண்டும். சில விஷயங்களை செய்யக்கூடிய தகுதிகளை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதை நான் சரியாக செய்திருக்கின்றேன் என நினைக்கின்றேன்? இந்த ஆட்டத்தில் எனக்கு ஒரு ஓவர் ஸ்பெல் வழங்கப்பட்டது குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை".
"ஏனென்றால் பல சமயம் எனக்கு சூரியகுமார் தொடர்ந்து நான்கு ஓவர்களையும் வரிசையாக வழங்கியிருக்கிறார். எனவே மனதளவில் எனக்கு எந்த சவால்கள் கொடுக்கப்பட்டாலும், அதை சிறப்பாக செய்ய நான் தயாராகவே இருக்கின்றேன்". என்னுடைய பந்துவீச்சு முறையில் ஃபிலிப்பர் ஸ்டைலை நான் கற்று வருகின்றேன். இந்த போட்டியில் நான் சிறப்பாகவே வந்து வீசி இருக்கின்றேன் என நினைக்கின்றேன். ஆனால் இன்னும் என்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்று வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.