கயானா : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி மீண்டும் அரை இறுதி ஆட்டத்தில் தடுமாறி இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. பொதுவாக டி20 உலக கோப்பையில் விராட் கோலி மட்டுமே அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்து வருவார்.
இந்திய அணிக்காக பல்வேறு போட்டிகளில் விராட் கோலி தனி ஆளாக நின்று வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் இல் சிடி யே தேயும் அளவுக்கு விராட் கோலி ஆடிய இன்னிங்ஸ்களை தினமும் அந்த சேனல் போட்டு வருகிறது.

ஆனால் தற்போது விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்கி வரும் நிலையில் தொடர்ந்து சொதப்பி வருகிறார். விராட் கோலி அதிரடியாக ஆட முயற்சி செய்து தன்னுடைய விக்கெட்டை இழப்பதே இதற்கு காரணம் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நடப்பு உலகக்கோப்பை தொடரில் விராட் கோலி அயர்லாந்துக்கு எதிராக ஒரு ரன்,பாகிஸ்தானுக்கு எதிராக நான்கு ரன், அமெரிக்காவுக்கு எதிராக டக் அவுட்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 24 ரன்கள், பங்களாதேஷ்க்கு எதிராக 37 ரன்கள், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டக் அவுட் இங்கிலாந்துக்கு எதிராக 9 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். மொத்தமாகவே ஏழு போட்டிகளில் விராட் கோலி 75 ரன்கள் தான் அடித்திருக்கிறார். கோலிக்கு மூன்றாவது இடத்தை வழங்காமல் விட்டதுதான் அவருடைய சொதப்பலுக்கு காரணம் என அவருடைய ரசிகர்கள் சப்பை கட்டு கட்டி வருகின்றனர்.
எனினும் அனுபவம் வாய்ந்த விராட் கோலி தொடக்க வீரராக நின்று பொறுப்பாக விளையாடிய ஆங்கர் ரோல் செய்ய வேண்டும் என்பதுதான் இந்திய அணி அவருக்கு கொடுத்த பொறுப்பாகும். ஆனால் தம் மீது ஸ்ட்ரைக் ரேட் தொடர்பாக தொடர்ந்து குற்றச்சாட்டு வருவதால் அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற ஈகோ மட்டுமே விராட் கோலிக்கு மேலோங்கி இருந்தது.
இதனால் அதிரடியாக ஆடி விராட் கோலி தொடர்ந்து ஆட்டமிழந்து வருகிறார். அதிரடியாக விளையாடினாலும் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் மிகவும் பரிதாபத்துக்குரிய வகையில் தான் இருந்தது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 24 பந்துகளில் 24 ரன்கள், வங்கதேசத்துக்கு எதிராக 28 பந்துகளில் 37 ரன்கள், இங்கிலாந்துக்கு எதிராக 9 பந்துகளில் ஒன்பது ரன்கள் பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று பந்துகளில் நான்கு ரன்கள் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5 பந்துகளில் டக் அவுட் என விராட் கோலி இந்த தொடரில் சொதப்பி இருக்கிறார்.
டிராவிட் பேச்சை கேட்டிருந்தால், தமக்கு கைதேர்ந்த விளையாட்டை ஆடி விராட் கோலி அணியின் ரன் குவிப்பிற்கு முக்கிய காரணமாக இருந்திருப்பார். விராட் கோலி ஒரு முனையில் நிற்கிறார் என தெரிந்தால் மற்ற வீரர்கள் அவரை சுற்றி பயமின்றி அதிரடியாக ரன் குவித்து இருப்பார்கள். ஆனால் தற்போது அது நடக்காமல் போய்விட்டது.