மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் விராட் கோலி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் உத்தரப் பிரதேசத்தில் உள்ள விருந்தாவன் தாம் என்ற பகுதியில் உள்ள பிரமானந்த் என்ற சாமியாரை சந்திக்க சென்றனர். அங்கு விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் மண்டியிட்டு அவரை வணங்கியதோடு அவரிடம் சில வார்த்தைகள் பேசினர்.
அந்த வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. சமீப காலமாக விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருக்கிறது. இந்த நிலையில் அவர் அந்த சாமியாரை சந்தித்து இருக்கிறார். 2023 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இதே பிரேமானந்த் சாமியாரை விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா சந்தித்து இருந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும், அதற்கு முன் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் விராட் கோலி மோசமாக செயல்பட்ட நிலையில் மீண்டும் அந்த சாமியாரை அவர்கள் குடும்பத்தினருடன் சந்தித்து உள்ளனர்.
இதற்கு முன் 2023 ஜனவரி மாதத்திலும் இதே சாமியாரை விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா சந்தித்த ஆசி பெற்ற நிலையில், தற்போது இரண்டாவது முறையாக அவரை சந்தித்து உள்ளனர். விராட் கோலியை இந்த முறை சந்தித்த பிரேமானந்த், "விராட் கோலி இந்தியா முழுவதற்கும் மகிழ்ச்சியை கொண்டு வருகிறார். அவர் வென்றால் ஒட்டுமொத்த இந்தியாவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவர் இந்தியா முழுவதும் இணைக்கப்பட்டு இருக்கிறார்." என்று கூறினார்.
மேலும், "சில சமயம் எவ்வளவு பயிற்சி செய்தாலும் நாம் தோல்வி அடைவோம். அது கடினமாக இருந்தாலும், நாம் புன்னகையுடனும், தோல்வியின் போது அமைதியாகவும் இருக்க வேண்டும்." என அவர் கூறினார். விராட் கோலியின் ஃபார்ம் குறித்து அவர் இவ்வாறு கூறி இருக்கலாம் என ரசிகர்கள் கருதுகின்றனர்.
விராட் கோலி அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாட உள்ளார். அதை தொடர்ந்து 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறார். இந்த இரண்டு தொடர்களிலும் அவர் சரியாக ரன் குவிக்கவில்லை என்றால் அவரது கிரிக்கெட் எதிர்காலமே கேள்விக்குறியாக மாறி விடும்.