மான்செஸ்டர்: இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில் இந்திய அணி பந்துவீச்சில் படுமோசமாகச் சொதப்பிய நிலையில், கேப்டனாக விராட் கோலி இருந்த நாட்களை நினைவுபடுத்தி அவரது சகோதரர் விகாஸ் கோலி பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது, தற்போதைய அணியின் கேப்டன் சுப்மன் கில் மற்றும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளது.
ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பைத் தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 358 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி, இந்திய பந்துவீச்சைத் துவம்சம் செய்து முதல் இன்னிங்ஸில் 669 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 311 ரன்கள் என்ற இமாலய முன்னிலையை இங்கிலாந்து பெற்றது.

இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவரும் ரன்களை வாரி வழங்கினர். நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்வில் முதல் முறையாக ஒரு இன்னிங்ஸில் 100 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்தார். முகமது சிராஜ் 140 ரன்களையும், ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும் 143 ரன்களையும் கொடுத்தனர். அறிமுக வீரர் அன்சுல் கம்போஜ் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
இந்த படுமோசமான பந்துவீச்சைத் தொடர்ந்து, விராட் கோலியின் சகோதரர் விகாஸ் கோலி தனது சமூக வலைதளப் பக்கத்தில், "சமீப காலம் வரை நம்மிடம் ஒரு டெஸ்ட் அணி இருந்தது. அதில் நமது பந்துவீச்சாளர்கள் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்துவார்கள்" என்று பதிவிட்டிருந்தார். இது, கோலியின் கேப்டன்சி காலத்தில் இந்திய அணி வெளிநாடுகளில் பெற்ற வெற்றிகளை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுவதாக அமைந்தது.
விராட் கோலியின் கேப்டன்சி காலத்தில், இந்திய அணி 5 பந்துவீச்சாளர்கள் என்ற ஆக்ரோஷமான திட்டத்துடன் களமிறங்கியது. பேட்டிங்கில் ஒருவரைத் தியாகம் செய்தாலும், 20 விக்கெட்டுகளை வீழ்த்துவதையே கோலி குறிக்கோளாகக் கொண்டிருந்தார். இந்த அணுகுமுறை மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது.
குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் இரண்டு முறை டெஸ்ட் தொடரை வென்றதும், 2021-22ல் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தியதும் கோலியின் சாதனைகளாகப் பார்க்கப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவை 68 போட்டிகளில் வழிநடத்தி 40 வெற்றிகளுடன், இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக கோலி திகழ்கிறார்.
ஆனால், கௌதம் கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு, இந்த அணுகுமுறை மாறியுள்ளது. பேட்டிங்கை வலுப்படுத்தும் நோக்கில் ஆல்-ரவுண்டர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதனால், குல்தீப் யாதவ் போன்ற சிறப்பு சுழற்பந்துவீச்சாளருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. மான்செஸ்டர் ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருந்தும் குல்தீப்பைச் சேர்க்காதது விமர்சனங்களை எழுப்பியது.
பேட்டிங்கை நீளமாக்கியும் இந்தியாவால் பெரிய ஸ்கோர்களை எட்ட முடியவில்லை. இந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸிலேயே கடைசி 4 விக்கெட்டுகள் வெறும் 21 ரன்களுக்குள் சரிந்தது குறிப்பிடத்தக்கது. கம்பீர் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றதிலிருந்து இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தடுமாறி வருகிறது. நான்காவது டெஸ்ட் போட்டியை இந்திய அணி டிரா செய்தாலும், விகாஸ் கோலியின் இந்தப் பதிவு, அணி நிர்வாகத்தின் திட்டங்கள் மற்றும் தேர்வுகள் குறித்த விவாதத்தை சூடேற்றி விட்டுள்ளது.