சென்னை: இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கொஞ்சம் கூட சுயநலம் பார்க்காமல் அணிக்காக அட்டாக்கிங் கிரிக்கெட்டை விளையாடுவதாக அனுபவ வீரர் அஸ்வின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். விராட் கோலியின் தரத்திற்கு ரசிகர்கள் அவரை கீழே இழுக்க பார்ப்பதாக கூறிய அஸ்வின், இந்திய வீரர்களுக்கான மனநிலையை தொடக்க வீரராக நிர்ணயிப்பதாக தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 171 ரன்களை சேர்த்தது. இதன்பின் சேஸிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி வெறும் 103 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியடைந்தது.

இந்த போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலி 9 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இந்த போட்டி மட்டுமல்லாமல் இந்த டி20 உலகக்கோப்பை முழுக்கவே விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் மோசமாகவே உள்ளது. 7 இன்னிங்ஸ்களில் விளையாடி வெறும் 75 ரன்களை மட்டுமே சேர்த்திருக்கிறார். டி20 உலகக்கோப்பை தொடர் வரலாற்றில் மோசமான பேட்டிங் சராசரி வைத்துள்ள பட்டியலில் விராட் கோலி இணைந்துள்ளார்.
இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் இந்திய அணியின் விராட் கோலி கம்பேக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே ரசிகர்கள் பலரும் விராட் கோலியை நீக்கிவிட்டு அவரது இடத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை கொண்டு வர வேண்டும் என்று விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.
ஆனால் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இருவரும் அடுத்த போட்டியிலும் தொடக்க வீரர் விராட் கோலி தான் என்பதை தெளிவாகவும், உறுதியாகவும் கூறியுள்ளனர். இந்த நிலையில் விராட் கோலி குறித்து அஸ்வின் பேசுகையில், இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி எச்சரிக்கையாக விளையாடவில்லை. தங்களின் ஸ்டைலில் இருந்து கொஞ்சம் கூட பின்வாங்கவில்லை.
விராட் கோலி ரசிகர்கள் கூட அவர் அரைசதம் அடிக்கவில்லை, சதம் அடிக்கவில்லை என்று ஃபீல் செய்கிறார்கள். ஆனால் இந்திய அணிக்காக விராட் கோலி அற்புதமான விஷயத்தை செய்து வருகிறார். கொஞ்சம் கூட சுயநலம் அவரது ஆட்டத்தில் இல்லை. ஏற்கனவே விராட் கோலி செட் செய்து வைத்துள்ள தரத்திற்கு விராட் கோலியை இழுக்க பார்க்கிறார்கள்.
ஆனால் விராட் கோலி எந்த மாற்றத்தையும் செய்ய போவதில்லை என்று வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். விராட் கோலி தனது ஆட்டத்தின் மூலமாக ஓய்வறைக்கு ஒரு செய்தியை கொடுத்துள்ளார். அபாரமான ஒரு சிக்ஸ், ஒரு 2 ரன்கள் எடுத்த போது அமைதி காக்காமல், மீண்டும் ஸ்டம்ப் டவுன் செய்கிறார். இதன் மூலம் அட்டாக்கில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று நிரூபித்துள்ளதாக பாராட்டியுள்ளார்.