லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான நடப்பு டெஸ்ட் தொடரில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா தோல்வியடைந்த நிலையில், முன்னாள் இந்திய ஆல் ரவுண்டரும், உலகக் கோப்பை வெற்றியாளருமான மதன் லால், விராட் கோலி தனது டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், மீண்டும் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா 1-2 எனப் பின்தங்கியுள்ளது. லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 193 ரன்கள் இலக்கை சேஸ் செய்த இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலை பெறும் வாய்ப்பை இந்தியா இழந்தது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்பு விராட் கோலி தனது டெஸ்ட் கிரிக்கெட் ஓய்வு முடிவை அறிவித்திருந்தார், இதன் மூலம் அவரது அவரது டெஸ்ட் கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்தது. தற்போது இந்திய அணி அனுபவ வீரர்கள் இன்றி இரண்டு போட்டிகளில் வெற்றிக்கு அருகே சென்று தோல்வி அடைந்துள்ளது.
அதனால் விராட் கோலி ஓய்வில் இருந்து திரும்புவதில் எந்தத் தவறும் இல்லை என்று மதன் லால் கூறி இருக்கிறார். விராட் கோலிக்கு இன்னும் சில வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் திறன் இருப்பதாக மதன் லால் குறிப்பிட்டார். மூத்த வீரர் விராட் கோலி திரும்பி வந்து தனது அனுபவத்தை இளம் வீரர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
"இந்திய கிரிக்கெட்டின் மீதான விராட் கோலியின் ஆர்வம் ஒப்பிட முடியாதது. அவர் ஓய்வை கைவிட்டு டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் திரும்ப வேண்டும் என்பது எனது விருப்பம். அப்படி திரும்புவதில் தவறில்லை. இந்தத் தொடரில் இல்லாவிட்டாலும், அடுத்த தொடரில் அவர் கம்பேக் கொடுக்க வேண்டும்," என்று மதன் லால் தெரிவித்தார்.
"எனது பார்வையில், கோலி தனது ஓய்வு முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் அவர் எளிதாக இன்னும் 1 அல்லது 2 ஆண்டுகள் விளையாட முடியும். அதன் மூலம் அவர் தனது அனுபவத்தை இளைஞர்களுக்குக் கடத்த முடியும். ஆனால், நீங்கள் இப்போதே டெஸ்ட் போட்டியை கைவிட்டு விட்டுவிட்டீர்கள். இப்போது கூட தாமதமாகவில்லை. தயவுசெய்து திரும்பி வாருங்கள்," என்றும் அவர் கோலியை கேட்டுக் கொண்டார்.