கட்டாக்: விராட் கோலி சமீப காலமாக மோசமாக பேட்டிங் ஆடி தனது விக்கெட்டை பறிகொடுத்து வரும் நிலையில், ராகுல் டிராவிட் அல்லது சுனில் கவாஸ்கர் ஆகியோரிடம் பேசுமாறு அறிவுரை கூறி இருக்கிறார் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா.
இந்திய அணியின் மூத்த வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தொடர்ந்து மோசமாக விளையாடி வந்ததால் சில மாதங்களாக விமர்சனங்கள் எழுந்தன. ரோஹித் சர்மா இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்து விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஆனால் விராட் கோலி அதே போட்டியில் வெறும் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்து மீண்டும் ஏமாற்றம் அளித்துள்ளார்.

விராட் கோலியின் மோசமான ஆட்டம் குறித்து அவரது தீவிர ரசிகர்களே கவலை அடைந்துள்ளனர். இலங்கை ஜாம்பவான் அர்ஜுனா ரணதுங்கா விராட் கோலி தனது பிரச்சினையை சரி செய்ய அறிவுரை கூறியுள்ளார். "சுனில் கவாஸ்கர், திலீப் வெங்சர்க்கார் அல்லது ராகுல் டிராவிட் போன்றவர்களுடன் விராட் கோலி பேச வேண்டும். அவர் மோசமாக ஆடி வரும் நிலையில் இதைத்தான் அவர் செய்ய வேண்டும். இது நிச்சயம் அவருக்கு உதவும்." என்றார்.
மேலும், "விராட் கோலி போன்ற ஒரு வீரர் இத்தனை ரன்களை சேர்த்த பிறகு அவர் ஓய்வு பெறுவதைப் பற்றி பலரும் பேசுவது சரியல்ல. அந்த முடிவை நாம் அவரிடமே விட்டுவிட வேண்டும். அது குறித்த முடிவை விராட் கோலி தான் எடுக்க வேண்டும். ஏன் எப்போதும் அவர் மீது புகழ் வெளிச்சத்தை செலுத்திக் கொண்டே இருக்கிறீர்கள்? இது தேவையற்றது என்பது எனது எண்ணம்." என்று அர்ஜுனா ரணதுங்கா கூறியுள்ளார்.
விராட் கோலி இதற்கு முன் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் சரியாக விளையாடவில்லை. அதற்கு முன் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் அவர் பெரிய அளவில் ரன் சேர்க்கவில்லை.
தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடிய போதும் அவர் சொதப்பி இருக்கிறார். அடுத்து 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவர் விளையாட இருக்கும் நிலையில் அவரது மோசமான ஃபார்ம் இந்திய அணிக்கு பின்னடைவாகவே அமைந்துள்ளது.