மும்பை: ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், டெஸ்ட் கிரிக்கெட்டை உச்சமாக கருதும் விராட் கோலி, வரவிருக்கும் இங்கிலாந்து ஐந்து டெஸ்ட் தொடரில் இந்தியா பெரிய தோல்வியைச் சந்தித்து, அணி நிர்வாகமும் தேர்வாளர்களும் அவரை மீண்டும் அழைத்தால், ஓய்விலிருந்து மீண்டு வருவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோலி, கடந்த மாதம் 123 டெஸ்ட் போட்டிகளில் 9,230 ரன்கள், 46.85 சராசரியுடன் 30 சதங்களுடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். இது குறித்து பேசிய கிளார்க்,"நான் இதை நம்புகிறேன். இந்தியா இங்கிலாந்துக்கு சென்று 5-0 என்று தோல்வியடைந்தால், ரசிகர்கள் விராட் கோலியை ஓய்விலிருந்து மீண்டு டெஸ்ட் கிரிக்கெட் ஆட வேண்டும் என்று விரும்புவார்கள்," என்று கிளார்க் கூறினார்.

"கேப்டன், தேர்வாளர்கள் மற்றும் ரசிகர்களின் ஆதரவுடன் கோரப்படும்போது, இங்கிலாந்தில் பெரிய தோல்வியைச் சந்தித்தால், அவர் மீண்டு வருவார் என்று நினைக்கிறேன். அவர் இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டை விரும்புகிறார். அவரது வார்த்தைகளில் அவரது ஆர்வம் உண்மையானது."
ஆர்சிபி உடன் ஐபிஎல் கோப்பையை வென்ற கோலியின் நீண்ட கனவு நிறைவேறிய பிறகு, அவர் இந்த வெற்றி "டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு ஐந்து மடங்கு கீழே" என்று கூறியிருந்தார்.
கோலியும் ரோஹித் ஷர்மாவும் ஜூன் 20 இல் லீட்ஸில் தொடங்கும் இங்கிலாந்து தொடருக்கு முன்பு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றனர். இது குறித்து பேசிய கிளார்க்,"ரோஹித் ஷர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவரது கேப்டன்சி யுக்திகள் ரீதியாக எந்த அணிக்கும் இழப்பு. அவர் ஒரு சிறந்த கேப்டனாக இருந்தார்.
"விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டை விட்டு விலகுகிறார். இது பேரழிவு! அவர் ஒரு சாம்பியனாக இருந்தார், டெஸ்ட் கிரிக்கெட் அவரை இழக்கும், விராட் டெஸ்டை உச்சமாக கருதுகிறார். இன்னும் நல்ல கிரிக்கெட் ஆடுகிறார்.ஆனால் இந்திய அணி 5-0 என்று இங்கிலாந்தில் தோற்கடிக்கப்பட்டால், நான் அப்படி நினைக்கவில்லை. அப்படி நடந்தால் கோலி ஓய்விலிருந்து திரும்பலாம். விராட் கோலியும் ரோஹித் ஷர்மாவும் இல்லாமலும் இந்திய அணி இங்கிலாந்தில் வெல்ல முடியும் என்று நினைக்கிறேன். இந்த இந்திய அணி ஒரு நல்ல அணி," என்று கூறினார்.
கிளார்க், குஜராத் டைட்டன்ஸுக்காக ஐபிஎல்லில் சிறப்பாக விளையாடிய இளம் பேட்ஸ்மேன் சாய் சுதர்ஷனையும் பாராட்டினார். "அவர் முன்னணி ரன் அடித்தவர் என்பதை மறந்துவிடுங்கள், இந்த இளைஞர் ஒரு சூப்பர் ஸ்டார். இடது கை பேட்ஸ்மேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் மூன்றாவது இடத்தில் ஆடுவார். இந்தியாவின் டி20 அணியில் தொடக்க வீரராக மாறுவார்."
"அவர் டெஸ்ட் அணியில் உள்ளார். இங்கிலாந்தில் முதல் வாய்ப்பு கிடைத்தால், மூன்றாவது இடத்தில் நேரடியாக ஆட முடியும். தொழில்நுட்ப ரீதியாக மிகச் சிறப்பாக உள்ளார். அவருக்கு எல்லா ஷாட்களும் உள்ளன, மனதளவில் தயாராக உள்ளார். அவர் என்னை மிகவும் கவர்ந்தார். அவர் அழகாக ஆடுகிறார், இடது கை பேட்ஸ்மேனின் பேக்-லிஃப்ட் உள்ளவர். வேகப்பந்து வீச்சுக்கு எதிராக ஷாட் பந்துகளையும் எதிர்கொள்வார்," என்றார். இதே போன்று பெங்களூரில் கிரிக்கெட் ரசிகர்கள் உயிரிழந்த சோக சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த கிளார்க், கொண்டாட்டம் முக்கியம் என்றாலும், யாருடைய உயிரும் போக கூடாது என்றார்.