பிர்மிங்காம்: சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியை அடுத்து, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, இந்திய அணியைப் பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
கோலி தனது பதிவில், "எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இந்திய அணி மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. பயம் இல்லாமல் ஆடியதோடு, இங்கிலாந்து அணியை சுவர் ஓடு சுவராக வைத்து அழுத்தி இருந்தீர்கள். சுப்மன் கில் தனது பேட்டிங்கின் மூலம் அணியை முன் நின்று வழிநடத்தினார். ஆடுகளத்தில் அனைவரும் தாக்கத்தை ஏற்படுத்தினார்கள். குறிப்பாக முகமது சிராஜ் மற்றும் ஆகாஷ் தீப் இந்த பிட்ச்சில் பந்து வீசியதை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்," என்று கூறி தனது பாராட்டை வெளிப்படுத்தியிருக்கிறார்.

முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கும் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இங்கிலாந்து மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவதன் மூலம், கடினமான நேரத்தில் உங்கள் இதயம் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் வெளிக்காட்டி இருக்கிறீர்கள். ஜஸ்பிரித் பும்ரா இல்லை. இது வெளிநாட்டில் நடக்கும் போட்டி. முதல் போட்டியில் தோல்வியடைந்து பின்னடைவைச் சந்தித்து இருந்தீர்கள்.
ஆனாலும் இந்த இளம் வீரர்கள் ஒரு பாதையைக் கண்டுபிடித்து வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஆகாஷ் தீப் பயமில்லாமல், விளையாட முடியாத அளவுக்குப் பந்து வீசினார். சுப்மன் கில் தனது வயதைக் கடந்த முதிர்ச்சியை வெளிப்படுத்தினார். இதுபோன்ற வெற்றியைத்தான் நாம் நீண்ட காலம் நினைவில் வைத்திருப்போம். அடுத்து இந்தத் தொடரை வெல்லுங்கள் வீரர்களே!" என்று யுவராஜ் சிங் குறிப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார்.
முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர் வெளியிட்டுள்ள பதிவில், "இங்கிலாந்து அணியை பேட்டிங்கில் முந்தி இருக்கிறீர்கள்; பந்துவீச்சில் முந்தி இருக்கிறீர்கள்; ஃபீல்டிங்கில் முந்தி இருக்கிறீர்கள். ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து அணியை வீழ்த்தி இருக்கிறீர்கள். இது மிகச் சிறந்த வெற்றி. 1 - 1 என்ற நிலையில் லார்ட்ஸ் மைதானத்திற்கு செல்கிறீர்கள். வாழ்த்துகள்! முதல் டெஸ்ட் போட்டியில் கேப்டனாக வெற்றி பெற்றிருக்கிறீர்கள். இன்னும் நிறைய வெற்றி பெற வேண்டும்," என்று பாராட்டி இருக்கிறார்.