டெல்லி : துருவ் ஜுரெல்லை பாராட்டுவதற்காக மீடியா வெளிச்சம் அனைத்து வீரர்கள் மீதும் இருக்க வேண்டும் என்று சூசகமாக சர்பராஸ் கானை விமர்சித்த சேவாக்கிற்கு ரசிகர்கள் காட்டமாக பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய இளம் வீரர் துருவ் ஜுரெல் ஒற்றை ஆளாக 90 ரன்களை குவித்தார். இதன் மூலமாக இந்திய அணி 307 ரன்கள் குவித்ததோடு, தரமான கம்பேக்கை நிகழ்த்தியது. 3வது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் கைகள் ஓங்குவதற்கு ஜுரெல்லின் ஆட்டமே முக்கிய காரணமாக அமைந்தது.

இதையடுத்து துருவ் ஜுரெல்லின் ஆட்டத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் வீரர் சேவாக், டிராமா, ஊடக வெளிச்சம் என்று எதுவும் இல்லை. அவரிடம் திறமை மட்டும் தான் உள்ளது. நெருக்கடியான சூழலில் நிதானத்தை வெளிப்படுத்தி முழு திறமையையும் நிரூபித்துள்ளார். வாழ்த்துகள் துருவ் ஜுரெல் என்று பாராட்டினார். இது மறைமுகமாக சர்பராஸ் கானை விமர்சிப்பது போல் அமைந்தது.
இதையடுத்து ரசிகர்கள் பலரும் சேவாக்கை கடுமையாக விமர்சித்தனர். முதல்தர கிரிக்கெட்டில் எந்த வீரரும் செய்யாத சாதனைகளை சர்பராஸ் கான் செய்துள்ளார். 3 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பதற்காக காத்திருந்துள்ளார். இதனால் அவர் மீது மீடியா வெளிச்சம் இருந்ததில் எந்த தவறும் இல்லை என்று பதிலடி கொடுத்தனர்.
அதேபோல் துருவ் ஜுரெல் வெறும் 15 முதல்தர போட்டிகள் மட்டுமே விளையாடி இருக்கிறார். அதனால் அவர் மீது மீடியா வெளிச்சம் படாததும் பெரிய தவறில்லை என்று விமர்சனங்கள் வந்தன. அதுமட்டுமல்லாமல் மீடியா வெளிச்சம் துருவ் ஜுரெல் மீது இல்லை என்று கூறும் சேவாக், இதுவரை ஜுரெல் குறித்து ட்விட்டர் பக்கத்தில் கூட பதிவிடவில்லையே என்று காட்டமாக ரசிகர்கள் பதில் அளித்தனர்.
சேவாக்கின் பதிவு சர்ச்சையான நிலையில் விளக்கம் அளித்துள்ளார். அதில், யாரையும் சிறுமைப்படுத்துவதற்கோ அல்லது விமர்சிக்கவோ இப்படி பதிவிடவில்லை. ஆனால் மீடியா வெளிச்சம் அனைவரின் திறமையை பொறுத்து சரிசமமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சிலர் சிறப்பாக பவுலிங் செய்துள்ளார்கள், சிலர் சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார்கள்.. ஆனால் அவர்கள் மீது போதுமான மீடியா வெளிச்சம் குவியவில்லை.

ராஞ்சியில் ஆகாஷ் தீப் சிறப்பாக செயல்பட்டார். ஜெய்ஸ்வால் அனைத்து போட்டிகளில் சிறப்பாக பேட்டிங் செய்திருக்கிறார். ராஜ்கோட் மைதானத்தில் சர்பராஸ் கானும், தற்போது ஜுரெல்லும் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி கொண்டுள்ளார் என்று பதிவிட்டுள்ளார். வர்ணனை செய்யாமல் வீட்டில் இருக்கும் முன்னாள் வீரர்கள் பலரும் இதுபோன்ற சர்ச்சையான ட்வீட்களை பதிவிட்டு விளையாட்டு தொடர்பான விவாதங்களில் ஈடுபடும் பணியை பெற்று வருவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.