மும்பை: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணிகளும் ரன் மழையைப் பொழிந்தன. இந்திய பந்துவீச்சாளர்கள் பலரும் ரன்களை வாரி வழங்கிய நிலையில், சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி மிக மோசமாகப் பந்துவீசினார் என்ற விமர்சனம் எழுந்துள்ளளது. இந்நிலையில், அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ள முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவைச் சுட்டிக்காட்டி ஒரு முக்கியமான கேள்வியை முன்வைத்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் வருண் சக்கரவர்த்தி தனது 4 ஓவர்களில் 64 ரன்களை விட்டுக்கொடுத்தார். அவரது பந்துவீச்சு சராசரி (எகானமி) 16 ஆக இருந்தது. குறிப்பாக இங்கிலாந்து இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல், வருண் வீசிய ஓவரில் அடுத்தடுத்து மூன்று சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். இருப்பினும், அந்த ஓவரில் இங்கிலாந்து அணியின் முக்கிய வீரரான ஜோஸ் பட்லரை க்ளீன் போல்ட் செய்து வருண் வெளியேற்றினார். டி20 போட்டிகளில் வருண் சக்கரவர்த்தி சந்தித்த மிக மோசமான பந்துவீச்சு இதுவாகும். இதனால் இறுதிப்போட்டியில் அவருக்குப் பதிலாக வேறு ஒருவரைச் சேர்க்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

வருண் சக்கரவர்த்தி மீதான விமர்சனங்களுக்குப் பதிலளித்த வீரேந்திர சேவாக், பேட்ஸ்மேன்களுக்குக் கொடுக்கும் ஆதரவை ஏன் பந்துவீச்சாளர்களுக்குக் கொடுப்பதில்லை எனக் கேள்வி எழுப்பினார். "இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மாவும் சிறப்பாகச் செயல்படவில்லை. கடந்த ஐந்து அல்லது ஆறு இன்னிங்ஸ்களில் அவர் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ளார். ஒரு பேட்ஸ்மேன் தொடர்ந்து சொதப்பினாலும் அவருக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்பு கொடுத்து ஆதரவு அளிக்கிறீர்கள்.
ஆனால் ஒரு பந்துவீச்சாளர் கடந்த இரண்டு அல்லது மூன்று போட்டிகளில் ரன்களை விட்டுக்கொடுத்தார் என்பதற்காக அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்று சொல்வது என்ன நியாயம்? அவருக்குப் பதிலாக வரும் மாற்று பந்துவீச்சாளர் சிறப்பாகச் செயல்படுவார் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது?" என்று சேவாக் காட்டமாகக் கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய சேவாக், கொல்கத்தா மற்றும் மும்பை ஆடுகளங்கள் பேட்டிங்கிற்குச் சாதகமான தட்டையான ஆடுகளங்கள் என்பதைச் சுட்டிக்காட்டினார். "வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான போட்டிகளில் ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாக இருந்தது. வருண் சக்கரவர்த்தி ஒரு 15 முதல் 20 ரன்கள் வரை கூடுதலாகக் கொடுத்திருக்கலாம். ஆனால், அடி வாங்கிய நிலையிலும் அவர் ஜோஸ் பட்லர் என்ற முக்கியமான விக்கெட்டை வீழ்த்தினார். சில பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்குவார்கள், ஆனால் விக்கெட்டுகளையும் வீழ்த்த மாட்டார்கள். வருண் சக்கரவர்த்தி பரவாயில்லை" என்று அவருக்கு ஆதரவாகப் பேசினார் சேவாக்.

வரும் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியிலும் இவ்விரு அணிகள் மோதியதில் இந்தியா வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.