லண்டன்: இந்திய டெஸ்ட் அணியின் தற்காலிக பயிற்சியாளராக விவிஎஸ் லக்ஷ்மன் நியமிக்கப்பட்டு இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதற்காக இந்திய அணி இங்கிலாந்தில் முகாமிட்டு பயிற்சிப் போட்டிகளில் விளையாடி வருகிறது.
இந்தப் பயிற்சிப் போட்டிகளை தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அருகில் இருந்து கவனித்து வருவார் எனவும், வீரர்களின் செயல்பாட்டைப் பார்த்து இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சேர்ப்பார் எனவும் முன்பு கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்தியா 'ஏ' அணி மற்றும் இந்திய டெஸ்ட் அணிக்கு இடையேயான பயிற்சிப் போட்டிக்கு முன்னதாக, அவர் அவசரமாக நாடு திரும்பினார். அவரது தாயாருக்கு உடல்நலம் மோசமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததால், அவர் உடனடியாக விரைந்தார். இதனிடையே, துணைப் பயிற்சியாளர் ராயன் டென்டெஷ்கொட் இந்திய வீரர்களை மேற்பார்வையிடுவார் எனக் கூறப்பட்டிருந்தது.
ஆனால், விவிஎஸ் லக்ஷ்மன் இந்திய டெஸ்ட் அணியை மேற்பார்வையிட்டு வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. அவர் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கிறார். கௌதம் கம்பீர் நாடு திரும்பிய நிலையில், விவிஎஸ் லக்ஷ்மன் இங்கிலாந்துக்குச் சென்று இருக்கிறார்.
விவிஎஸ் லக்ஷ்மன் நேற்று நடந்த பயிற்சிப் போட்டியின்போது மைதானத்தில் இருந்ததாகவும், இந்திய அணி வீரர்களுக்கு ஆலோசனைகள் அளித்ததாகவும் சில ஊடகத்தினர் சுட்டிக்காட்டி உள்ளனர். ஒருவேளை கௌதம் கம்பீர் முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்துக்குச் செல்லவில்லை என்றால், விவிஎஸ் லக்ஷ்மன் தற்காலிக பயிற்சியாளராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கௌதம் கம்பீருக்கு முன், விவிஎஸ் லக்ஷ்மனைத்தான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கும்படி பிசிசிஐ கோரிக்கை வைத்ததாக ஒரு தகவல் அப்போது சொல்லப்பட்டது. ஆனால், ஆண்டு முழுவதும் இந்திய அணியுடன் பயணம் செய்ய வேண்டி இருக்கும் என்பதால், லக்ஷ்மன் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். இந்த நிலையில், அவருக்கு தற்காலிக பயிற்சியாளராகவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதிலும் மிகவும் முக்கியமான டெஸ்ட் தொடருக்குப் பயிற்சியாளராக இருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது இந்திய அணியில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.