லண்டன்: தமிழக வீரரான வாஷிங்டன் சுந்தருக்கு இந்திய டெஸ்ட் அணியின் பிளேயிங் லெவனில் இடம் மறுக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வரும் டெஸ்ட் தொடரில் வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். இந்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாத நிலையில், இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் ஆல்ரவுண்டராக இடம் பிடித்திருந்தார். அவர் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் இந்திய அணிக்குக் கைகொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இரண்டாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கில் 42 ரன்கள் சேர்த்து அவர் நம்பிக்கை அளித்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பேட்டிங்கில் அவரது செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்தபோதிலும், பந்துவீச்சில் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்தார். வாஷிங்டன் சுந்தர் முதன்மை சுழற்பந்து வீச்சாளராகப் பயன்படுத்தப்படவில்லை. இந்திய அணியில் ஐந்தாவது பந்துவீச்சாளராகத்தான் அவர் பயன்படுத்தப்பட்டார்.

வாஷிங்டன் சுந்தர் சில ஓவர்கள் வீசினாலே போதும் என்ற திட்டத்தில்தான் இந்திய அணி இருந்தது. அப்படி இருந்தும் அவர் அதிக ரன்களை வாரி இறைத்தார். முதல் இன்னிங்ஸில் வாஷிங்டன் சுந்தர் 14 ஓவர்களில் 73 ரன்களை வாரி இறைத்திருந்தார். ஒரு ஓவருக்குச் சராசரியாக 5.2 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார். ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை.
இரண்டாவது இன்னிங்ஸில் மற்ற பந்துவீச்சாளர்கள் ரன்கள் குறைவாக விட்டுக்கொடுத்தும் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், வாஷிங்டன் சுந்தர் ஆறு ஓவர்களில் 28 ரன்களை வாரி இறைத்திருந்தார். இதில் அவர் இரண்டு மெய்டன் ஓவர்கள் வீசியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி பார்த்தால், மீதமிருந்த நான்கு ஓவர்களில் மட்டுமே 28 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
இங்கிலாந்து வீரர்கள் வாஷிங்டன் சுந்தரின் ஓவரைக் குறி வைத்து ரன் சேர்ப்பது இதன் மூலம் நாம் புரிந்துகொள்ளலாம். எனவே, பந்துவீச்சில் வாஷிங்டன் சுந்தரின் செயல்பாடு பின்னடைவாக உள்ளது. தற்போது இந்திய அணியில் மூன்று ஆல்ரவுண்டர்கள் இருக்கின்றனர். ரவீந்திர ஜடேஜா, நிதிஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் எனும் மூவர் இருக்கின்றனர்.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சுக்கு அதிக முக்கியத்துவம் இருக்கும் என்பதால் இவர்கள் மூவரில் ஒருவரை நீக்கிவிட்டு ஒரு முழு நேர பந்துவீச்சாளரைச் சேர்க்க வேண்டிய அவசியம் உள்ளது. மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெறுவார்கள் என்பதால் நிச்சயம் சுழற்பந்து வீச்சில் மாற்றம் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
ரவீந்திர ஜடேஜா கடந்த போட்டியில் பந்துவீச்சில் ஈர்க்கவில்லை என்றாலும், பேட்டிங்கில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் அரை சதம் அடித்து இந்திய அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை அளித்தார். எனவே அவரை நீக்குவதற்கு வாய்ப்பு இல்லை. அதற்கு அவரது அனுபவமும் ஒரு காரணம். இந்த நிலையில் வாஷிங்டன் சுந்தரை நீக்கிவிட்டு முழு நேர சுழற்பந்து வீச்சாளரான குல்தீப் யாதவை சேர்ப்பதற்கு வாய்ப்பு உள்ளது.