லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நான்காவது நாள் முடிவின் போது இந்திய அணி வெற்றிக்கு மேலும் 135 ரன்கள் தேவைப்பட்டது. அது மட்டுமில்லாமல் இந்தியாவின் கைவசம் ஆறு விக்கெட்டுகள் இருந்தது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர், இந்திய அணி ஐந்தாவது நாள் மதிய உணவு நேர இடைவெளிக்கு பின்பு வெற்றியை பெற்று விடும் என்று உறுதியாக கூறினார்.
ஆனால் இந்திய அணி தற்போது தோல்வியை தழுவி இருப்பதால் பலரும் வாஷிங்டன் சுந்தரின் இந்த கருத்தை கிண்டல் செய்து வருகின்றனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரபல கிரிக்கெட் விமர்சகரும் வர்ணனையாளருமான டேவிட் லயாட், வாஷிங்டன் சுந்தரை சாடி இருக்கிறார்.

இது குறித்து பேசிய அவர், சுந்தர் பேசியதை எடுத்துக் கொள்ள வேண்டும். அவர் பந்துவீச்சு பிரமாதமாக செயல்பட்டு நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பின் இந்தியா ஐந்தாவது நாளில் எளிதாக வெற்றி பெற்று விடும் என்று நம்பிக்கையாக கூறினார். நிச்சயமாக வாஷிங்டன் சுந்தர் பேசிய பேச்சை இங்கிலாந்து வீரர்கள் கேட்டிருப்பார்கள்.
இதனால் அவர் பேட்டிங் செய்ய வந்தவுடன் இங்கிலாந்து வீரர்கள் ஆக்ரோஷமாக இருந்தார்கள். அப்படி பேசிய வாஷிங்டன் சுந்தர் வெறும் நான்கு பந்துகளை மட்டும் தான் தாக்கு பிடித்தார். இதன் மூலம் வாயை மூடி விட்டு உங்களுடைய திறமையை பேச வையுங்கள் என்ற வார்த்தைக்கு வாசிங்டன் சுந்தர் ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும்.
இதன் மூலம் அவர் கண்டிப்பாக கற்றுக் கொள்வார் என நம்புகிறேன். இரு அணிகளும் ஐந்தாவது நாளில் ஹீரோவுக்காக தேடிக் கொண்டிருந்தார்கள். ஜடேஜா தன்னுடைய அனுபவத்தை பயன்படுத்திக் கொண்டு விளையாடினார். சிராஜும், பும்ராவும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு ஜடஜாவுக்கு உறுதுணையாக நின்றார்கள்.
இந்த சூழலில் பென் ஸ்டோக்ஸ் மிகப்பெரிய பங்களிப்பை வெளிப்படுத்தி அணியை வெற்றி பெற வைத்திருக்கின்றார். அதேபோல் சோயிப் பசீர் கடைசி விக்கெட் எடுத்ததும் பார்ப்பதற்கு நன்றாக இருந்தது. இந்த டெஸ்ட் போட்டி காலத்திற்கும் பேசப்படும் கடைசிவரை ரசிகர்களுக்கு திரில்லிங் அனுபவத்தை இந்த போட்டி கொடுத்தது என்று டேவிட் லயாட் கூறியுள்ளார்