மான்செஸ்டர்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய நான்காவது டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில், போட்டி முடிவடைய 10 ஓவர்களுக்கும் மேல் இருந்தபோது, இங்கிலாந்து அணி போட்டியை டிரா செய்ய ஒப்புக் கொள்ளுமாறு இந்திய அணிக்குக் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து இரண்டாவது முறை வாஷிங்டன் சுந்தர் கை குலுக்க மறுத்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்தக் கோரிக்கையை ரவீந்திர ஜடேஜா முதலில் மறுத்த நிலையில், மீண்டும் ஒருமுறை இங்கிலாந்து அணி துணை கேப்டன் ஹாரி ப்ரூக், வாஷிங்டன் சுந்தரிடம் சாமர்த்தியமாகக் கை கொடுத்து போட்டியை முடித்துக் கொள்ள முயற்சித்ததாகவும் அதை சுந்தர் லாவகமாக மறுத்து விட்டதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

ஐந்து போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் மூன்று போட்டிகளின் முடிவில், இந்திய அணி 1-2 எனப் பின்தங்கி இருந்தது. இந்த நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி பின்தங்கிய நிலையில் தான் இருந்தது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 358 ரன்களையும், இங்கிலாந்து அணி 669 ரன்களையும் எடுத்திருந்தன. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 311 ரன்கள் பின்தங்கி இருந்தது.
இரண்டாவது இன்னிங்ஸின் தொடக்கத்திலேயே ரன் ஏதும் எடுக்காமல் முதல் இரண்டு விக்கெட்டுகளையும் இழந்தது. அதனால், இந்திய அணி இந்தப் போட்டியில் தோல்வியடையும் என்றே பலரும் எண்ணினர். ஆனால், கே.எல். ராகுல் 90 ரன்கள் மற்றும் கேப்டன் சுப்மன் கில் 103 ரன்கள் எடுத்து போட்டியை ஐந்தாவது நாள் வரை எடுத்துச் சென்றனர். ஐந்தாவது நாளில் சுப்மன் கில் மற்றும் ராகுலின் விக்கெட்டுகள் வீழ்ந்த பின்னர், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா இணைந்து அணியை மீட்டெடுத்தனர். அவர்கள் இருவரும் நாள் முழுவதும் நின்று பேட்டிங் செய்தனர்.
அப்போது, ஐந்தாம் நாள் ஆட்டம் முடிவடைய 14 ஓவர்கள் மீதமிருந்தன. மேலும், இந்திய அணி அப்போது ஓரளவும் முன்னிலையும் பெற்றிருந்தது. அதனால், போட்டி டிரா ஆவது உறுதியானது. அதேசமயம், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் 85 ரன்களுக்கு மேல் ரன் சேர்த்து இருந்தனர். இருவரும் சதம் அடிக்கும் நோக்கில் இருந்தனர்.
அந்த நேரத்தில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் ரவீந்திர ஜடேஜாவை அணுகி, போட்டியை டிரா செய்து கொள்ளலாமா? என்று கேட்டார். ஆனால், ரவீந்திர ஜடேஜா அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார். இந்திய அணி தொடர்ந்து பேட்டிங் செய்யும் என அவர் அறிவித்தார். அதன் பின்னர் ரவீந்திர ஜடேஜா சதம் அடித்தார்.
அத்துடன், போட்டியை முடித்துக் கொள்ளலாம் என இங்கிலாந்து அணி மீண்டும் திட்டமிட்டது. இந்த முறை இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் ஹாரி ப்ரூக், வாஷிங்டன் சுந்தருக்குக் கை கொடுத்து, போட்டியை டிரா செய்ததாக அறிவித்துவிடலாம் என நினைத்தார். அதன் மூலம் இந்திய அணி வேறு வழியின்றி போட்டியை முடித்துக் கொள்ளும் என அவர் திட்டமிட்டார்.
ஆனால், வாஷிங்டன் சுந்தர் அவரைப் பார்க்காதது போல வேகமாக நழுவிச் சென்று, ரவீந்திர ஜடேஜா சதம் அடித்ததற்கு அவருக்கு வாழ்த்து கூறினார். தொடர்ந்து பேட்டிங் செய்த வாஷிங்டன் சுந்தர் தனது முதல் டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். இதை அடுத்து, இங்கிலாந்து அணி டிரா செய்வதற்காக இந்திய அணியிடம் கையேந்தி நின்றதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
இரண்டு நாட்கள் பந்து வீசியதில் இங்கிலாந்து அணி மிகவும் சோர்வடைந்து இருந்தது. அதனால் தான், சற்று முன்னதாகவே போட்டியை முடித்துக் கொள்ளலாம் என இங்கிலாந்து அணி முறையிட்டது. ஏனெனில், அடுத்த போட்டி இன்னும் மூன்று நாட்களில் தொடங்க உள்ளது. இடையே அதிக கால அவகாசம் இல்லை என்பதால், இங்கிலாந்து அணி முடிந்தவரை போட்டியை விரைவாக முடிக்க வேண்டும் என நினைத்தது. ஆனால், இந்திய அணியோ அவர்களுக்குச் சற்று கூடுதல் பணிச்சுமையை அளித்த பின்னரே போட்டியை டிரா செய்தது.