சென்னை: இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி விராட் கோலி, ரோஹித் சர்மா,அஸ்வின், முகமது ஷமி உள்ளிட்ட வீரர்கள் இல்லாமல் தொடரை இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் சமன் செய்திருக்கிறது. இந்த போட்டியில் பல இளம் வீரர்கள் தங்களுடைய திறமையை நிரூபித்து அணியை காப்பாற்றி இருந்தார்கள்.
அதில் குறிப்பாக தமிழக கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் பேட்டிங்கில் ஒரு சதம், ஒரு அரை சதம் அடித்து பந்து வீச்சிலும் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் அளித்த பேட்டி ஒன்றில், இங்கிலாந்து பயணம் குறித்து தனது அனுபவத்தை தெரிவித்திருக்கிறார்.

அதில், இங்கிலாந்து தொடரில் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்த கலாச்சாரம் மிகவும் அற்புதமாக இருந்தது. அந்த கலாச்சாரத்தில் ஒவ்வொரு வீரர்களுக்கும் ஒவ்வொரு பங்கு இருந்தது. நாங்கள் அனைவரும் இளம் வீரர்களாக இருந்தோம். அது எங்களுக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்தது.
இந்த தொடருக்கு வரும் போது நிச்சயம் விதவிதமான நெருக்கடியான சூழல் ஏற்படும். அப்போது ஒவ்வொரு வீரர்களும் அணியின் வெற்றிக்காக தங்களுடைய பங்களிப்பை செலுத்த வேண்டும் என்பதை புரிந்து கொண்டு தான் வந்திருந்தோம். தற்போது தொடர் முடிவடைந்த பின் அதை திரும்பிப் பார்க்கும்போது நாங்கள் என்ன நினைத்தமோ அதை சரியாக செய்திருக்கிறோம் என்று நம்பிக்கை வந்திருக்கின்றது.
இந்த தொடரை பார்த்தீர்கள் என்றால் ஒவ்வொரு நெருக்கடியான கட்டத்திலும் எங்கள் அணியின் தனிப்பட்ட வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு அணியை சரிவிலிந்து காப்பாற்றி இருக்கிறார்கள். இப்படி ஒரு அணியை தான் நாங்கள் கட்டமைக்க வேண்டும் என்று நினைத்தோம். அதுமட்டுமில்லாமல் அணியில் உள்ள வீரர்களுடன் நான் நல்ல ஒரு நட்பு உறவை ஏற்படுத்தி இருக்கின்றேன்.
எங்கள் அணியின் கேப்டன் கில் சிறப்பாக வழி நடத்தினார். பயிற்சியாளர் கம்பீரும் எங்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து பக்க பலமாக இருந்தார் என்று வாஷிங்டன் சுந்தர் கூறினார். தற்போது அடுத்த டெஸ்ட் தொடர் வரும் அக்டோபர் மாதம் வெஸ்ட் இண்டீஸ் எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது. இதில் வாஷிங்டன் சுந்தர் முக்கிய வீரராக இடம் பெறுவார் என எதிர்பார்க்கலாம்.