இங்கிலாந்துக்கு 374 ரன்கள் இலக்கு.. 123 ஆண்டு ரெக்கார்டை உடைக்க விடுமா இந்தியா? சுந்தர் அதிரடி
லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் 374 ரன்களை இந்தியா அணி வெற்றி இலக்காக நிர்ணயித்திருக்கிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இதனால் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று ஆக வேண்டும் என்ற வாழ்வா? சாவா? கட்டத்தில் இந்திய அணி இந்த போட்டியில் விளையாடுகிறது. இந்த நிலையில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 224 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 247 ரன்களில் சுருண்டது.

இதனை அடுத்து 23 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது. கே எல் ராகுல், சாய் சுதர்சன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க, ஜெய்ஷ்வால் 51 ரன்கள் உடனும், ஆகாஷ் தீப் நான்கு ரன்களுடனும் மூன்றாவது நாள் ஆட்டத்தை தொடந்தனர்.
யாருமே எதிர்பார்க்காத வகையில் ஆகாஷ் தீப் அதிரடியாக விளையாடி தன்னுடைய முதல் அரை சதத்தை பூர்த்தி செய்தார். 94 பந்துகளை எதிர்கொண்ட அவர் 66 ரன்கள் எடுத்தார். இதில் 12 பவுண்டரிகள் அடங்கும். மேலும் கேப்டன் கில் 11 ரன்களிலும், கருண் நாயர் 17 ரன்களிலும் ஆட்டம் இழக்க மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் தன்னுடைய ஆறாவது டெஸ்ட் சதத்தை பூர்த்தி செய்தார்.
இதனை தொடர்ந்து இறுதியில் ஜடேஜா மீண்டும் தன்னுடைய திறமையான பேட்டிங்கை வெளிப்படுத்தி அரை சதத்தை பூர்த்தி செய்தார். 53 ரன்களில் ஜடேஜா வெளியேற துருவ் ஜூரல் 34 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 350 ரன்கள் கூட தொடாது என எதிர்பார்க்கப்பட்டது. அப்போது வாஷிங்டன் சுந்தர் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இங்கிலாந்து வீரர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
39 பந்துகளில் அரை சதம் கடந்த அவர் 46 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதில் நான்கு பவுண்டரிகள், நான்கு சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸில் 396 ரன்கள் எடுத்தது. இதனால் இங்கிலாந்து அணிக்கு வெற்றி பெற 374 ரன்கள் என்ற இலக்கை இந்தியா நிர்ணயித்தது. லண்டன் ஓவல் மைதானத்தில் நான்காவது இன்னிங்ஸில் வெற்றிகரமாக அடிக்கப்பட்ட ஸ்கோரே 263 ரன்கள் தான். அதுவும் 1902 ஆம் ஆண்டு இது அடிக்கப்பட்டது. இதனால் இங்கிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்றால் 123 ஆண்டுகால ரெக்கார்டை உடைக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications