மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விரைவில் விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர் மாற்று வீரராக மட்டுமே இடம்பெறுவார், அவருக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்காது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
வாஷிங்டன் சுந்தர் இதுவரை இந்திய அணிக்காக ஒன்பது டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். 2021ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் அறிமுகமானார். அதன் பிறகு சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் மீண்டும் டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். இதுவரை அவர் ஒன்பது போட்டிகளில் 468 ரன்கள் சேர்த்துள்ளார். அவரது பேட்டிங் சராசரி 42 ஆகும். 4 அரை சதங்கள் எடுத்துள்ளார். மேலும் 25 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

நல்ல ஆல்ரவுண்டராக இருந்தாலும், அவருக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முக்கியத்துவம் கிடைக்காது எனக் கூறப்படுகிறது. ஏனெனில், இங்கிலாந்தில் வழக்கம்போல வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளங்களே இருக்கும். அங்கு சுழற்பந்துவீச்சாளர்களுக்குப் பெரிய வேலை இருக்காது.
எனவே, இரண்டு சுழற்பந்துவீச்சாளர்கள் மட்டுமே இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் ஒருவர் ஆல்ரவுண்டரான ரவீந்திர ஜடேஜாவாக இருப்பார். மற்றொருவர் முழு நேர சுழற்பந்துவீச்சாளராக இருப்பார் எனக் கூறப்படுகிறது. அந்த இடத்தில் குல்தீப் யாதவ் அணியில் இடம்பெற அதிக வாய்ப்பு உள்ளது.
எனவே, இவர்கள் இருவரின் அனுபவத்தின் காரணமாகப் பிளேயிங் லெவனில் எளிதாக வாய்ப்பு கிடைக்கும். இவர்களைத் தாண்டி, வாஷிங்டன் சுந்தரால் அணியில் இடம் பெற முடியாது எனக் கூறப்படுகிறது.
வேகப்பந்துவீச்சாளர்களாக பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரோடு, பேட்டிங்கிலும் ரன் சேர்க்கக்கூடிய வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களான ஷர்துல் தாக்கூர் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டிக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரவீந்திர ஜடேஜா அல்லது குல்தீப் யாதவ் ஆகிய இருவரில் ஒருவருக்கு அணியில் இடம் மறுக்கப்பட்டால் மட்டுமே வாஷிங்டன் சுந்தரால் அணியில் இடம் பெற முடியும் என்ற சூழ்நிலை உள்ளது.