லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் வெற்றிக்கு வெறும் 135 ரன்கள் தான் தேவைப்படுகிறது. அதேசமயம் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு ஆறு விக்கெட்டுகள் எஞ்சி இருக்கின்றது. கடைசி நாள் ஆட்டமான இன்று யார் வெற்றி பெற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறி இருக்கின்றது.
ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி கொடுப்பதால் இந்த போட்டி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த நிலையில் இந்திய அணியின் நம்பிக்கையை குலைக்கும் விதமாக இங்கிலாந்து அணியின் துணைப் பயிற்சியாளர் மார்க்கஸ் டிரஸ்கோச்சிக் பேட்டி ஒன்றை கொடுத்திருக்கின்றார்.

இந்திய அணியின் ஆறு விக்கெட்டுகளை நாங்கள் ஒரு மணி நேரத்தில் எடுத்து விடுவோம் என்றும் அவர் திமிராக பேசியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்," நான்காவது நாள் ஆட்டத்தில் கடைசி ஒரு மணி நேரம் அபாரமாக இருந்தது. எங்கள் அணியின் பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். இந்த போட்டியை ஒவ்வொருவரும் ஆர்வத்துடன் பார்த்தார்கள்."
" ரசிகர்களும் எங்கள் அணிக்கு உறுதுணையாக இருந்தார்கள். மைதானத்தில் இருந்த ரசிகர்களின் ஆதரவு எங்கள் அணி வீரர்களுக்கு உத்வேகமாக இருந்தது. 5வது நாள் முதல் செஷன் மிகவும் முக்கியமானது. அதில் போட்டி எவ்வாறு செல்கிறதோ அது வைத்து தான் வெற்றியும் இருக்கும். இந்தியா எவ்வளவு பாசிட்டிவாக இருப்பார்கள் எப்படி ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று காலையில் தெரிந்துவிடும்."
" நாங்கள் முதல் ஒரு மணி நேரத்திலே 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தி விடுவோம் என்று மார்க்கஸ் டிரஸ்கோட்ச்சிக் தெரிவித்துள்ளார். முன்னதாக இங்கிலாந்து அணி தங்களது இரண்டாவது இன்னிங்ஸில் 250 ரன்களுக்கு மேல் எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் 22 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதேபோன்று இங்கிலாந்தில் வேகப் பந்துவீச்சாளர்களும் அபாரமாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளனர். ஜோப்ரா ஆர்ச்சர் மற்றும் பிரைடன் கர்ஸ் ஆகியோர் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதனால் இந்திய அணி நாளை வெற்றி பெற வேண்டும் என்றால் அது ராகுல், பண்ட் கையில் தான் இருக்கின்றது.