லண்டன்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி வரும் வியாழக்கிழமை லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சூழலில் ஒவ்வொரு போட்டிக்கு முன்பும் ஆடுகளம் எவ்வாறு இருக்கும் என இரு அணிகளைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் வந்து ஆடுகளத்தை சோதனை செய்வார்கள்.
இந்த நிலையில் லண்டன் ஓவல் மைதானத்தில் ஆடுகளத்தை சோதனை செய்ய வந்தபோது பயிற்சியாளர் கம்பீருக்கும், ஆடுகளப் பராமரிப்பாளர் போர்டீஸ்க்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் பலரும் பயிற்சியாளர் கம்பீர் மீதுதான் தவறு என்றும் கள பராமரிப்பாளர் தனது பணியை செய்யும் போது கம்பீர் தடுத்ததாகவும் கூறுகிறார்கள்.

ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பதை தற்போது பார்க்கலாம். விதிப்படி ஆடுகளம் தயாரிக்கப்பட்ட போது இரு அணியைச் சேர்ந்த வீரர்களும் பயிற்சியாளர்களும் ஆடுகளத்தை சேதப்படுத்தாமல் சோதிப்பதற்கு எந்த ஒரு தடையும் இல்லை. ஆனால் பயிற்சியாளர் போர்டீஸ் வேண்டுமென்றே இந்திய அணியின் துணை பயிற்சி குழுவினரை திட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த பக்கம் வராதீர்கள் செல்லுங்கள் என்று அவர் விரட்டி இருக்கின்றார். இதை கேள்விப்பட்ட பயிற்சியாளர் கம்பீர் ஆடுகளத்திற்கு சென்று அங்கு நின்று கொண்டிருந்த பராமரிப்பாளர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு இருக்கின்றார். அதற்கு ஆடுகளப் பராமரிப்பாளர் போர்டீஸ், தான் போட்டி நடுவரிடம் உங்களைப் பற்றி புகார் கூறுவேன் என்று எச்சரித்து இருக்கிறார்.
இதனால் மேலும் கடுப்பான கம்பீர் நீங்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று புகார் அளித்துக் கொள்ளுங்கள். எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. நீங்கள் வெறும் மைதான ஊழியர் தான். அதை மறந்து விடாதீர்கள் என்று பதிலடி கொடுத்திருக்கின்றார் .இது குறித்து என்ன நடந்தது என்று ஆடுகளப் பராமரிப்பாளர் போர்ட்டீசிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ஏன் இதை என்னிடம் கேட்கிறீர்கள். என்ன நடந்தது என்று கம்பீரிடம் கேளுங்கள். அவர் இன்று என்னிடம் கோபமாக பேசினார் இங்கு மறைக்க எதுவும் இல்லை என்று கூறி பதிலளித்தார்.