புனே: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. தொடரின் நான்காவது போட்டி ஜனவரி 31, 2025 அன்று புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் (எம்சிஏ) மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் இந்தியா வென்றால் தொடரை கைப்பற்றி விடும். இங்கிலாந்து அணி வெற்றி பெற்றால் ஐந்தாவது போட்டி தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டியாக மாறும். இதுவரை நடந்த போட்டிகளின் அடிப்படையில் இரு அணிகளின் பலம், பலவீனம் என்ன? எந்த அணி வெல்லும் என பார்க்கலாம்.

இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை திலக் வர்மா, அபிஷேக் சர்மா இதுவரை சிறப்பாக ஆடி உள்ளனர். சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து சொதப்பி வருகிறார். இரண்டாவது டி20 போட்டியில் திலக் வர்மா ஆட்டமிழக்காமல் 72 ரன்கள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு வழி வகுத்தார். முதல் போட்டியில் அபிஷேக் சர்மா அரை சதம் அடித்து இருந்தார்.
இந்திய அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை வருண் சக்ரவர்த்தி நம்ப முடியாத வகையில் சிறப்பாக பந்துவீசி விக்கெட் வேட்டையாடி வருகிறார். மூன்று போட்டிகளில் 10 விக்கெட்டுகளுடன் அவர் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளராக இருக்கிறார். அவரது பந்துவீச்சு சராசரி 8.50 மட்டுமே.
மற்ற இந்திய பந்துவீச்சாளர்களில் அக்சர் பட்டேல் தனது அனுபவத்தை வெளிப்படுத்தி கட்டுக் கோப்பாக பந்து வீசி விக்கெட்களையும் வீழ்த்துகிறார். முதல் இரண்டு போட்டிகளில் ஆடிய அர்ஷ்தீப் சிங் பவர்பிளே ஓவர்களில் விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்து அணிக்கு பெரும் சிக்கலாக இருந்தார். பிற பந்துவீச்சாளர்கள் சற்று பின்னடைவை சந்தித்து உள்ளனர்.
இங்கிலாந்து அணியின் பேட்டிங்கை பொறுத்தவரை பென் டக்கெட் கடந்த போட்டியில் அரைசதம் அடித்து சிறப்பாக விளையாடி இருந்தார். மற்றபடி கேப்டன் ஜோஸ் பட்லர் மட்டுமே இதுவரை அதிக ரன் குவித்து இருக்கிறார். முதல் இரண்டு போட்டிகளிலும் அவரே இங்கிலாந்து அணியின் பெரும்பான்மையான ரன்களை சேர்த்து இருந்தார்.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை பொறுத்தவரை அதில் ரஷீத் மூன்றாவது டி20 போட்டியில் தனது பந்துவீச்சு மற்றும் பேட்டிங் திறமையால் அணியின் வெற்றிக்கு உதவினார். பிரைடன் கார்ஸ் 2 போட்டிகளில் 5 விக்கெட்கள் வீழ்த்தி இந்திய அணிக்கு தலைவலியாக இருக்கிறார்.
வருண் சக்ரவர்த்தியின் சிறப்பான பந்துவீச்சால் இந்திய அணி இங்கிலாந்தை விட ஒருபடி முன்னே உள்ளது. அர்ஷ்தீப் சிங் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டால் நிச்சயம் இந்திய அணி நான்காவது டி20 போட்டியை வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது.
இருப்பினும், இங்கிலாந்தின் அதிரடி பேட்டிங் மற்றும் ஜோஸ் பட்லர், பென் டக்கெட் ஆகியோரின் ஃபார்ம் மற்றும் அதில் ரஷீத் போன்ற அனுபவமிக்க வீரர்கள் இருப்பதால், இந்திய அணிக்கு இந்தப் போட்டி சரியான சவாலாக இருக்கும்.
புனேவில் உள்ள எம்சிஏ மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமான பிட்ச் என்று அறியப்படுகிறது. இங்கு பந்து நன்றாக எழும்பி வரும், வேகம் சீராக இருக்கும். சுழற்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தின் நடு ஓவர்களில் சில விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த, மாறுபட்ட பந்துகளை வீச வேண்டும்.