மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டி வரும் 22ஆம் தேதி புதன்கிழமை கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது.
இதில் சிஎஸ்கே வீரர்கள் சிவம் துபே, ருதுராஜ் போன்றவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, சிவம் துபேவுக்கு என்ன ஆனது என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து பேசிய அவர், நான் முதலில் ருதுராஜ் பற்றி பேச விரும்புகிறேன். ஆனால் அவரால் இந்திய அணியில் இடம் பிடிக்க முடியவில்லை. அதேபோன்று வாய்ப்புக்காக ரஜத் பட்டிதாரும் காத்துக் கொண்டிருக்கிறார். எனினும் அணியில் பல அதிரடி பேட்ஸ்மேன்கள் இருக்கிறார்கள். ஆனால் என்னுடைய கவனம் எல்லாம் சிவம் துபே மீதுதான் இருக்கிறது. அவர் இந்திய டி20 உலக கோப்பையை வென்ற அணியின் முக்கிய வீரராக இருந்தார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில் சிவம் துபே 16 பந்துகளில் 22 ரன்கள் அடித்தார். இது அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான இன்னிங்ஸ் ஆகும். நீங்கள் வெற்றி பெறும்போது அணியில் உள்ள அனைவருக்கும் அதற்கான மரியாதையை தர வேண்டும். முதலில் சிவம் துபேவின் பேட்டிங் பீல்டிங் மீது கேள்விகள் இல்லாமல் இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.
ஆனால் அவர் உங்களுக்கு டி20 உலக கோப்பையை வென்று கொடுத்திருக்கிறார். டி20 உலக கோப்பை தொடருக்கு பிறகு அவருக்கு காயம் ஏற்படவில்லை. எனினும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது. சிவம் துபே குறித்து யாரும் பேச கூட முன் வருவதில்லை. ரியான் பராக் குறித்து கூட பலரும் கேள்வி கேட்கிறார்கள்.ஆனால் சிவம் துபே எங்கு சென்றார் என்று யாரும் கேட்கவில்லை.
திடீரென்று துபே இந்திய அணியில் இருந்து மறைந்து விட்டார். உலகக்கோப்பை அணியில் இடம் பிடித்த அளவுக்கு சிவம் துபே நல்ல வீரர் என்றால் அவரிடம் இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் வரை நல்ல கிரிக்கெட் ஆடுவதற்கான திறன் இருக்கிறது. முன்பெல்லாம் காயம் அடைந்த வீரர் முழு உடல் தகுதியை பெற்று விட்டால் அவருக்கு தான் வாய்ப்பு வழங்கப்படும். ஆனால் தற்போது அந்த பார்முலாவை தேர்வுக்குழு தூக்கி போட்டு விட்டது என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.