அகமதாபாத்: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது இரு அணி வீரர்களும் கையில் பச்சை நிற பட்டையை அணிந்து விளையாடினர். இது ஏன்? என பல ரசிகர்களும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளனர்.
சர்வதேச கிரிக்கெட் அமைப்பின் தலைவர் ஜெய் ஷாவின் புதிய முன்னெடுப்பின் படி இரு அணி வீரர்களும் இந்த பச்சை நிற பட்டையை அணிந்து விளையாடினர். இது ஒரு விழிப்புணர்வு இயக்கமாக செயல்படுத்தப்பட்டு உள்ளது.

சமீபத்தில் ஜெய் ஷா "உடலுறுப்புகளை தானம் செய்வோம், உயிர்களை காப்போம்" என்ற உடல் உறுப்பு தான விழிப்புணர்வை முன்னெடுத்து இருக்கிறார். கிரிக்கெட் விளையாட்டின் மூலம் அந்த விழிப்புணர்வை பரப்ப முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது இரு அணி வீரர்களும் கையில் பச்சை நிற பட்டையை அணிந்து விளையாடினர்.
அத்துடன் இந்த போட்டி நடந்த அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் போட்டிக்கு முன்னதாக இரு அணி கேப்டன்களும் உடல் உறுப்புகளை தானம் செய்வோம், உயிர்களை காப்போம் என்ற வாசகம் அடங்கிய பதாகையில் கையெழுத்திட்டனர். இந்த செயலை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அபாரமாக ரன் குவிப்பில் ஈடுபட்டது. ரோஹித் சர்மா ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தாலும், அதன் பின் வந்த வீரர்கள் அபாரமாக ரன் குவித்தனர். சுப்மன் கில் சதம் அடித்தார்.
சுப்மன் கில் 78 பந்துகளில் 112 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். விராட் கோலி நீண்ட காலமாக ஃபார்மில் இல்லை என்ற விமர்சனம் எழுந்து இருந்த நிலையில் அவர் தற்போது 55 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். ஸ்ரேயாஸ் ஐயரும் அரை சதம் அடித்தார்.