மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் முழு உடல் தகுதியைப் பெற்று சர்வதேச போட்டிகளுக்கு திரும்பினார். டி20 தொடரில் பும்ரா விளையாடாத நிலையில் ஷமி முக்கிய வீரராக அணியில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஷமி கடைசி நேரத்தில் இடம் பெறவில்லை. இது ரசிகர்களிடையே அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஷமி இடம்பெறாததற்கான காரணம் குறித்து தெரிவித்திருக்கிறார்.

ஷமி தன்னுடைய திறமையை நிரூபித்திருக்கும் வீரர்.இந்தியாவின் டாப் 10 பவுலர்களை நீங்கள் தேர்வு செய்தால், அதில் நிச்சயம் ஷமி இருப்பார். தன்னுடைய உடல் தகுதி குறித்து அனைவரையும் விட ஷமிக்கு நன்றாக தெரியும். ஷமி உடல்நலம் குறித்து எப்போதுமே அணி நிர்வாகத்திடம் நேர்மையாக இருப்பார். எனவே நேற்று ஷமி இடம்பெறாதது குறித்து இருதரப்பும் எடுத்த முடிவாக தான் இது இருக்கும்.
காயத்திலிருந்து ஒரு வீரர் மீண்டு வரும்போது அதில் பல நிலைகள் இருக்கின்றது. அவர் மீண்டும் கிரிக்கெட் போட்டிக்கு திரும்ப அதிக நேரம் ஆகலாம். எனவே சமியை எப்போது விளையாட வைக்க வேண்டும் என்று அணி நிர்வாகத்திற்கு நன்றாகவே தெரியும். சமியை அவசரப் படுத்தி விளையாட வைக்க பயிற்சியாளர் மற்றும் கேப்டன் நினைத்திருக்க மாட்டார்கள்.
இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சமியும் பும்ராவும் காயத்திலிருந்து திரும்பி விளையாடும் போது கூடுதல் கவனம் தேவை. இந்த சூழலில் சிராஜ் ஒரு நல்ல தேர்வாக இருந்திருப்பார். துபாயில் நீங்கள் நான்கு சுழற்பந்துவீச்சாளர் வைத்து விளையாட முடியாது.எனவே சிராஜை தேர்வு குழுவினர் சேர்த்திருக்க வேண்டும்.
விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் சொதப்பினாலும் ஒரு நாள் கிரிக்கெட்டில் அவர்கள் ரன்கள் குவிப்பார்கள். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். தற்போது இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரஞ்சி போட்டிக்கு திரும்பியிருப்பது நல்ல விஷயம் தான். ஆனாலும் வெறும் பெயருக்காக இரண்டு போட்டிகளில் விளையாடிவிட்டு செல்லக்கூடாது.
உங்களால் முடியும் என தொடர்ந்து விளையாடுங்கள். இதுபோன்று நீங்கள் தொடர்ந்து விளையாடும்போது, அது ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் நல்ல விஷயமாக இருக்கும். விராட் கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்கள் அணியில் விளையாடும்போது இளம் வீரர்கள் அதிக அளவு பயன்பெறுவார்கள் என்று இர்பான் பதான் கூறியுள்ளார்.