சென்னை: முகமது ஷமி இந்திய டி20 அணியில் தேர்வு செய்யப்பட்ட பிறகும் அவருக்கு போட்டிகளில் ஆடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் தான் இதற்கு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது.
முகமது ஷமி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்திய அணியில் இடம் பெறவில்லை. அவருக்கு காலில் வலி ஏற்பட்டு பின்னர் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் பின் பயிற்சி மேற்கொண்டு வந்தார். 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான அணியில் அவர் இடம் பெற்று இருக்கிறார்.

அதற்கு முன்னதாக பயிற்சி பெறும் வகையில் அவர் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரில் அவரது பெயர் சேர்க்கப்பட்டது. அவர் டி20 தொடரின் முதல் போட்டியிலேயே பிளேயிங் லெவனில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
முகமது ஷமி ஏன் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் விளையாடவில்லை என்பது பற்றி இந்திய அணி வட்டாரத்தில் இருந்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. முகமது ஷமிக்கு இடது முழங்காலில் லேசான வலி இருப்பதால் அவரால் முழு வேகத்தில் பந்து வீச முடியவில்லை என கூறப்படுகிறது.
அதன் காரணமாகவே அவரை போட்டிகளில் பயன்படுத்தாமல் காத்திருப்பில் வைத்துள்ளது இந்திய அணி நிர்வாகம் ஒருவேளை இப்போதே முகமது ஷமியை பந்து வீச வைத்து அவருக்கு ஏற்பட்டிருக்கும் காயம் மேலும் பெரிதானால் அவரால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட முடியாமல் போகலாம்.
எனவே, டி20 தொடரில் அனைத்து போட்டிகளிலும் அவரை விளையாட வைக்காமல் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் மட்டும் விளையாட வைக்க பயிற்சியாளர் கவுதம் கம்பீர் திட்டமிட்டு இருக்கிறார். இந்த முடிவை அவர் மட்டும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. தேசிய கிரிக்கெட் அகாடமியின் ஆலோசனையும் இதில் அடங்கி உள்ளது.
டி20 தொடரில் ஒன்று அல்லது இரண்டு போட்டிகளில் விளையாட இருக்கும் முகமது ஷமி, அடுத்த நடைபெற உள்ள ஒரு நாள் தொடரில் இரண்டு போட்டிகளிலாவது விளையாடுவார் என கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்பார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் மொத்தம் ஐந்து போட்டிகள் மட்டுமே உள்ள நிலையில் அவர் தனக்கு ஏற்பட்டிருக்கும் வலியுடன் ஊசி செலுத்திக்கொண்டு அந்த ஐந்து போட்டிகளிலும் விளையாடி முடித்து விடுவார் என கூறப்படுகிறது.