ஐதராபாத்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இருந்து விராட் கோலி விலகி இருப்பதால், அந்த இடத்தில் எந்த வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்ற விவாதம் ரசிகர்களிடையே தொடங்கியுள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் ஜனவரி 25ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதில் முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத் மைதானத்தில் நடக்கவுள்ள நிலையில், 2 நாட்களுக்கு முன்பாகவே இந்திய வீரர்கள் அனைவரும் அங்கு வந்தனர். 2 நாட்களாக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வந்த நிலையில், இன்று திடீரென விராட் கோலி சொந்த காரணங்கள் காரணமாக முதல் 2 போட்டிகளில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மனைவியின் பிரசவம் மற்றும் ஃபிட்னஸ் பிரச்சனையால் மட்டுமே இதுவரை விராட் கோலி டெஸ்ட் போட்டிகளை தவறவிட்டுள்ளார். இதனால் விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவொரு பக்கம் இருக்க, விராட் கோலி போன்ற ஜாம்பவான் வீரரின் இடத்தை இந்திய அணி நிர்வாகம் எப்படி நிரப்ப போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் தென்னாப்பிரிக்கா மண்ணில் அனைத்து வீரர்களும் மோசமாக ஆடிய போது, விராட் கோலி எந்தவித பிரச்சனையுமின்றி அசால்ட்டாக ரன்களை குவித்தார்.
ஏற்கனவே நம்பர் 3 வரிசையில் களமிறங்கி வரும் சுப்மன் கில் மோசமான ஃபார்மில் இருப்பதால், நம்பர் 4ல் விளையாடும் வீரர் நல்ல ஃபார்மில் இருக்க வேண்டும் என்று பார்க்கப்படுகிறது. இதனால் விராட் கோலியின் இடத்தை இளம் வீரர்களை கொண்டு நிரப்பாமல், ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் கூட்டணி அனுபவ வீரரை கொண்டு நிரப்ப முடியும். ரஞ்சி டிராபி தொடரில் அனுபவ வீரர் புஜாரா 3 போட்டிகளில் விளையாடி ஒரு இரட்டை சதம் உட்பட 444 ரன்களை விளாசி இருக்கிறார்.
முதல் 2 போட்டிகள் ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய மைதானங்களில் நடக்கவுள்ளதால், பந்து முதல் நாளில் இருந்து சுழலும். அதில் ஐதராபாத் மைதானத்தில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா 510 ரன்களையும், விசாகப்பட்டினம் மைதானத்தில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியுடன் இணைந்து மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் அமைத்த அனுபவமும் புஜாராவிற்கு உள்ளது. ஒருவேளை புஜாரா தேர்வு செய்யப்பட்டால், அது அவருக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று பார்க்கப்படுகிறது.