மான்செஸ்டர்: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. விராட் கோலி, ரோகித் சர்மா, அஸ்வின் ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையில் கில் தலைமையில் இந்திய அணி இந்த தொடரில் களமிறங்கியுள்ளது.
வெளிநாட்டு தொடருக்கு குடும்பத்தினர் அதிக நாள் வந்து தங்கக்கூடாது போன்ற கடும் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டதால் தான் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

மேலும் முற்றிலும் இளம் வீரர்களை வைத்து இந்திய டெஸ்ட் அணியை கட்டமைக்கும் முயற்சியில் கம்பீர் ஈடுபட்டார். இதனால், அவர் தந்த நெருக்கடிதான் விராட் கோலி, ரோஹித் சர்மா விலகலுக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது. இதனால் தான் விராட் கோலி டெஸ்ட் தொடரிலிருந்து ஓய்வு பெற்றார். இந்த நிலையில் விராட் கோலி தற்போது தனது ஓய்வு நேரத்தை குடும்பத்துடன் இங்கிலாந்தில் கழித்து வருகிறார்.
ஐபிஎல் தொடர் முடிவடைந்த உடன் இங்கிலாந்துக்கு வந்துள்ள விராட் கோலி லண்டனில் உள்ள அவரது சொந்த வீட்டில் தங்கி இருக்கின்றார். இந்த தருணத்தில் தான் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது விராட் கோலி நேரடியாக மைதானத்திற்கு வந்து போட்டியை பார்ப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக லண்டனில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி மைதானத்திற்கு வந்து பார்ப்பது மட்டுமல்லாமல் இந்திய அணி வீரர்களுக்கு சில அறிவுரைகளை கூறுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் விராட் கோலி இந்திய அணி இருக்கும் பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை. மேலும் மைதானத்திற்கும் அவர் வரவில்லை. ஆனால் அதே சமயத்தில் லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரை விராட் கோலி நேரடியாக கண்டு களித்தார். இதை சுட்டிக்காட்டி உள்ள ரசிகர்கள், டென்னிஸ் போட்டிக்கு சென்ற விராட் கோலி ஏன் கிரிக்கெட் பக்கம் திரும்பவில்லை என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.கம்பீர் மீது உள்ள கோபத்தால் தான் விராட் கோலி இந்திய அணி விளையாடும் போட்டிகளை பார்க்கவில்லை என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.