பிர்மிங்காம்: இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெற்று இருக்கும் கருண் நாயரை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக சாய் சுதர்சனை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பலரும் கருண் நாயரை விமர்சித்து வருகின்றனர்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு கருண் நாயர் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்தார். அவர் இதற்கு முன் இடம்பிடித்த போதும் முச்சதம் அடித்து இருந்தார். அதன் பிறகு அவருக்கு போதிய வாய்ப்புகள் வழங்கவில்லை என்ற விமர்சனம் இருந்தது.

இந்த நிலையில், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி கருண் நாயர் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்திருந்தார். இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவர் சிறப்பாக விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், இதுவரை விளையாடிய இரண்டு டெஸ்ட் போட்டிகளில் நான்கு இன்னிங்ஸ்களில் அவர் 77 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். முதல் டெஸ்டில் 0 மற்றும் 20 ரன்கள் எடுத்திருந்தார் கருண் நாயர். இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 31 மற்றும் 26 ரன்கள் எடுத்துள்ளதால், அவர் மிகவும் சராசரியாக விளையாடி வருவதால் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
அவரால் இங்கிலாந்து ஆடுகளங்களில் ஸ்விங் மற்றும் ஸீம் ஆகும் பந்துகளை எதிர்கொள்ள முடியவில்லை என்ற பலவீனம் சுட்டிக்காட்டப்படுகிறது. அவர் இந்திய ஆடுகளங்களில் மட்டும் தான் எளிதாக ரன் குவிப்பார்; வெளிநாட்டு ஆடுகளங்களில் அவரால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியாது என அவரை இந்திய அணியில் ஆட வேண்டும் என சொன்ன அதே ரசிகர்கள் தற்போது கூறத் துவங்கியிருக்கின்றனர்.
மேலும், மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கருண் நாயருக்கு வாய்ப்பளிக்கக் கூடாது, 33 வயதாகிவிட்ட அவருக்கு இனியும் வாய்ப்புகள் வழங்குவதற்குப் பதிலாக 22 வயது வீரரான சாய் சுதர்சனுக்கு அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. சாய் சுதர்சன் முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 30 ரன்கள் தான் எடுத்தார். ஆனால் அவர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம் பெறவில்லை. இந்த நிலையில் அவருக்கு கருண் நாயருக்குப் பதிலாக வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் சரியாக ரன் குவிக்காத போதும், மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் கைகொடுத்ததால் இந்திய அணி அபாரமாக ரன் குவித்தது. முதல் இன்னிங்ஸில் 587 ரன்கள் சேர்த்த இந்திய அணி, முதல் இன்னிங்ஸ் முடிவில் 180 ரன்கள் முன்னிலை பெற்றது. அடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் கே.எல். ராகுல் 55 ரன்கள் எடுத்தார். ரிஷப் பண்ட் மற்றும் சுப்மன் கில் தொடர்ந்து ரன் சேர்த்தனர். இந்திய அணி முன்னூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்ட முன்னிலையைப் பெற்று இருக்கிறது.
மூன்றாவது டெஸ்ட் போட்டி லாட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்தப் போட்டியின் போது இந்த மாற்றம் நடக்குமா என்று பார்க்கலாம்.