மான்செஸ்டர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. இங்கிலாந்து அணி இந்த தொடரில் இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்று இருப்பதால், மான்செஸ்டர் டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஒரு வேலை இந்திய அணி இந்த போட்டியில் டிரா செய்தால் கூட, கடைசி போட்டியில் வென்று தொடரை சமன் செய்துவிட முடியும். இதனால் ஐந்தாவது நாளில் என்ன நடக்கப் போகிறது என்ற கடும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன்கள் எடுக்க, இங்கிலாந்து அணி 669 ரன்கள் எடுத்தது.

இதனை அடுத்து 311 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி 2வது இன்னிங்சில் ரன் எடுக்காத நிலையில் ஜெய்ஸ்வால், சாய் சுதர்சன் ஆகியோர் ஆட்டம் இழந்து இந்தியாவுக்கு அதிர்ச்சி தொடக்கத்தை கொடுத்தனர். எனினும் ராகுல் மற்றும் கில் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருவரும் சதத்தை நெருங்கின்றனர்.
இதனால் நான்காவது நாள் ஆட்ட நேரம் முடிவில் இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்திருக்கிறது. இது இங்கிலாந்து அணியின் ஸ்கோரை விட 137 ரன்கள் குறைவாகும். இந்திய அணி ஐந்தாவது நாள் ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஸ்கோரை எட்டுவது மட்டுமல்லாமல் கூடுதலாக 150 முதல் 200 ரன்கள் எடுக்க வேண்டும். தேநீர் இடைவெளி பிறகு வரை பேட்டிங் செய்தால் மட்டுமே போட்டியை டிரா செய்ய முடியும்.
ஆனால் அதற்கு இந்திய அணி வீரர்கள் தங்கள் வாழ்நாளில் சிறந்த ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்த வேண்டும். இல்லை எனில் மான்செஸ்டரில் மழை பெய்தால் மட்டுமே போட்டி சமனில் முடியும். இந்த சூழலில் ஞாயிற்றுக்கிழமை அன்று மான்செஸ்டரில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறதா என்பதை தற்போது பார்க்கலாம்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள வானிலை தரவுகள் படி, மான்செஸ்டரில் ஞாயிற்றுக்கிழமை மழை பெரும் அளவு பெய்ய வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படி மழை பெய்தால் கூட ஐந்து நிமிடம் அல்லது பத்து நிமிடம் வரை தான் பெய்யும் என்றும் இதனால் போட்டியே தடைப்படும் அளவுக்கு இல்லை ஒரு செஷனே தடைப்படும் அளவுக்கு மழை பெய்யாது என்றும் தெரிகிறது. இதனால் இயற்கை இந்திய அணிக்கு உதவி செய்யவில்லை. இதன் காரணமாக இந்திய பேட்ஸ்மேன்கள் தான் டெஸ்ட் போட்டியை காப்பாற்ற வேண்டும்.